டெஸ்ட் சாம்பியன்ஷிப்
இந்த தொடர் பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி மார்ச் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளது. எனவே அந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய தொடரில் வெற்றி பெற வேண்டும் அல்லது சமன் செய்தே தீர வேண்டும்.
பிசிசிஐ ஏற்பாடு
இந்நிலையில் இந்த தொடருக்கு தயாராவதற்காக பிசிசிஐ ஸ்பெஷல் ஏற்பாடு செய்துள்ளது. அதாவது நாக்பூரில் 2 இடங்களில் இந்தியாவுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. பிப்ரவரி 2ம் தேதியன்று அனைத்து வீரர்களும் நாக்பூரில் ஒன்றுக்கூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் நாக்பூருக்கு சென்றுவிடுவார்.
5 பயிற்சி செஷன்கள்
அங்கு மொத்தமாக 5 செஷன்கள் நடத்தப்படுகிறது. அதன்படி முதல் 3 செஷன்கள் அங்குள்ள பழைய விதர்பா கிரிக்கெட் வாரிய மைதானத்தில் நடைபெறுகிறது. பல டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ள இந்த மைதானத்தில் தற்போது சர்வதே போட்டிகள் நடைபெறுவதில்லை. இங்குள்ள களமும் புதிய விதர்பா கிரிக்கெட் வாரிய மைதானத்தில் உள்ள களமும் ஒரே மாதிரி இருக்கும் என்பதால் அங்கு பயிற்சி பெறவுள்ளனர்.
சீனியர்களின் கம்பேக்
மீதமுள்ள 2 செஷன் பயிற்சிகளை புதிய மைதானத்தில் பெறுவார்கள். இங்கு தான் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. ரோகித் சர்மா, முகமது ஷமி, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் ஒருவார ஓய்வுக்கு பின் கம்பேக் தரும் சூழலில் ரவீந்திர ஜடேஜாவும் காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார்.