மெகா ஏலம்
ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி அடுத்தாண்டு நடக்கவிருக்கும் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியும். 2 புதிய அணிகளுக்கும் வீரர்கள் வேண்டும் என்பதால் ஏலத்தின் முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்ட முறைகளிலும் மாற்றம் கொண்டுவரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் சிக்கல்
தற்போது இருக்கும் முறைபடி பார்த்தால், 2 புதிய அணிகள் வந்தால் போட்டிகளின் எண்ணிக்கை மொத்தமாக 94 ஆக உயரும். மேலும் கிட்டத்தட்ட 3 மாத காலங்கள் அதற்கு தேவைப்படும். எனவே போட்டிகளின் எண்ணிக்கையை 74 ஆக குறைத்து 60 நாட்களுக்குள் தொடரை நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
புது முறை
அதாவது, தற்போதைய விதிமுறை படி, ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை லீக் போட்டியில் மோத வேண்டும். அதன் பின்னர் ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும். ஆனால் புதிய நடைமுறையில், மொத்தம் உள்ள 10 அணிகளும் 2 பிரிவுகளாக ( தலா 5) பிரிக்கப்படும். அதில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் 2 முறை போட்டியிட்டு, புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 2 அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும்.
யோசிக்கவே இல்லை
இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், 94 போட்டிகளை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இல்லை. முதலீட்டாளர்களும் தயாராக இல்லை. அவ்வளவு பெரிய தொடராக நடத்தினால் அயல்நாட்டு வீரர்களின் தேதிகள், மற்றும் சரியான கால இடைவெளி கிடைக்காது. எனவே அது குறித்து வரும் காலங்களில் தான் யோசிக்க முடியும், தற்போது இல்லை எனக்கூறியுள்ளார்.
பிசிசிஐ திட்டம்
2 புதிய அணிகளை வைத்து பிசிசிஐ பெரிய திட்டங்களை போட்டு வருகிறது. அதாவது இரு அணிகளாலும் கிட்டத்தட்ட 14 போட்டிகள் கூடுதலாக நடக்கும். இதன் மூலம் சுமார் ரூ.800 கோடி வரை பிசிசிஐக்கு வருமான கிடைக்கவுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அணியிடம் இருந்தும் சுமார் ரூ.2000 கோடி வரை வருவாய் கிடைக்கவுள்ளது. வீரர்களுக்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும் எனத் தெரிகிறது.