கொரோனா பாதிப்பு
ஐபிஎல் 2021 தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அடுத்த மாதம் 18ம் தேதி துவங்கி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
அடுத்தடுத்த தொடர்கள்
தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த இரண்டிலும் இந்திய அணி வெல்லும் தீவிரத்துடன் உள்ளது. இந்நிலையில் இலங்கையிலும் இந்திய அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளை கொண்ட தொடர்களில் மோதவுள்ளனர்.
தொடரின் முன்னோட்டம்
இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடருக்கான முன்னோட்டமாக ஐபிஎல் 2021 தொடரின் போட்டிகள் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 29 போட்டிகள் மட்டுமே பூர்த்தியான நிலையில் தற்போது ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய வீரர்கள் இடம்பிடிப்பு
இந்நிலையில் குறைந்த ஓவர்களின் போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில், அதை டி20 உலக கோப்பை தொடருக்கான முன்னோட்டமாக வீரர்களுக்கு பயிற்சியாக கொள்ள பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதையடுத்து அணியின் ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், யுஸ்வேந்திர சஹல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்த தொடரில் இடம்பெறவுள்ளனர்.
வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி
ஜூலை மாதத்தில் இலங்கை தொடர் நடைபெறவுள்ள நிலையில் டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடர் இந்தியாவில் நடைபெறுமா அல்லது வேறு எங்காவது நடைபெறுமா என்ற தெளிவு இல்லாத நிலையில், வீரர்களை சிறப்பாக தயார்படுத்த பிசிசிஐ முனைப்பு காட்டுகிறது.