கிரிக்கெட் பாதிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக உலகில் பல்வேறு விளையாட்டுக்கள் பாதிக்கப்பட்டன. அதில் கிரிக்கெட் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இரு மாதங்களாக ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி கூட நடைபெறவில்லை. ஐபிஎல் தொடரும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் பயிற்சி செய்யும் வீரர்கள்
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ளனர். பிசிசிஐ அவர்களை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. இந்திய அணியில் ஆடும் வீரர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது பிசிசிஐ. அதற்காக ஸ்மார்ட்போன் ஆப் கூட தயாரித்துள்ளது.
பிசிசிஐ முடிவு
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அரசின் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை கொண்டு முடிவு எடுத்து வருகிறது பிசிசிஐ. உள்ளூர் போட்டிகள் முதல் சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் என அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ள நிலையில், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை துவக்க பாதுகாப்பான சூழ்நிலை ஏற்பட காத்துக் கொண்டுள்ளது,
கிரிக்கெட் தொடர்கள்
அடுத்ததாக நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ காய் நகர்த்தி வருகிறது. அதற்கு மிக விரைவில் இந்திய வீரர்களை பயிற்சி மேற்கொள்ள வைக்க திட்டம் வகுத்து வருகிறது.
லாக்டவுன் தளர்வு
நான்காம் கட்ட லாக்டவுன் அறிவிப்பின் போது விளையாட்டுப் பயிற்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது கிரிக்கெட் பயிற்சிகளை துவக்க சாதகமான அம்சமாக அமைந்தது. எனினும், தனி நபர் பயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வெளியே வந்த ஷர்துல் தாக்குர்
இந்த நிலையில், மும்பை மாநிலத்தை சேர்ந்த இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் சனிக்கிழமை அன்று தன் சொந்த மாவட்டமான பால்கரில் உள்ள மைதானத்துக்கு சென்று பயிற்சி மேற்கொண்டார். பயிற்சியை துவக்கிய முதல் இந்திய வீரர் என செய்திகளும் வெளியாகின.
அனுமதி பெறவில்லை
இந்த நிலையில், ஷர்துல் தாக்குர் பிசிசிஐயின் அனுமதியைப் பெறவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. ஷர்துல் தாக்குர் பிசிசிஐ ஒப்பந்தம் பெற்ற வீரர் ஆவார். கிரேடு "சி"யில் அவர் இடம் பெற்றுள்ளார். அவர் இந்த சமயத்தில் பிசிசிஐ அனுமதி பெற்றே வீட்டை விட்டு வெளியே சென்று இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
பிசிசிஐ கோபம்
இது குறித்து பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்களின் படி, ஷர்துல் தாக்குர் மீது கடும் கோபத்தில் உள்ளது பிசிசிஐ. சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளை துவக்க ஆயத்தமாகி வரும் நிலையில் ஒரு வீரர் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளாவிட்டாலும் சிக்கல் ஏற்படும் என கருதுகிறது பிசிசிஐ.
மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகம்
நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. பால்கர் மாவட்டம் சிவப்பு மண்டலம் இல்லை என்றாலும் அந்த மாநிலத்தில் பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளியே செல்வது ஆபத்தான முடிவாகவே உள்ளது.
சிக்கலில் ரோஹித், கோலி
மும்பையில் இருக்கும் முக்கிய வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் பயிற்சி செய்ய வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். பாதிப்பு குறைந்த பகுதியில் உள்ள மற்ற வீரர்கள் பயிற்சி செய்ய துவக்கினாலும் கோலி, ரோஹித் பயிற்சி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.