தலைமை பயிற்சியாளர்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2017ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் மீண்டும் 2019ம் ஆண்டு நீட்டிக்கப்பட்டது. இந்த சூழலில் அவரின் தற்போதைய பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. ஐசிசி கோப்பையை வென்று கொடுக்காததால் ரவிசாஸ்திரி தொடர்ந்து பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை எனத் தெரிகிறது.
ஏமாற்றமளித்த டிராவிட்
இதனையடுத்து ரவிசாஸ்திரிக்கு அடுத்தபடியாக ராகுல் டிராவிட் தான் தலைமை பயிற்சியாளராக இருப்பார் எனத் தெரிகிறது. பல்வேறு இளம் வீரர்களை உலக தரத்திற்கு கொண்டு வந்த டிராவிட் பயிற்சியாளராக வந்தால் இந்திய அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர் அதற்கு விரும்பவில்லை எனத் தெரிகிறது.
பயிற்சியாளர்
இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ஆவதற்கு அனில் கும்ப்ளே அல்லது விவிஎஸ் லக்ஷ்மண் ஆகியோர் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2016 - 17ம் ஆண்டில் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே, பதவியேற்ற ஓராண்டிற்குள் விராட் கோலியுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக பதவி விலகினார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.
நிலவும் கடும் போட்டி
இதே போல வி.வி.எஸ். லக்ஷ்மணன் இந்திய பயிற்சியாளராக மாறுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். இதன்காரணமாக நிச்சயம் கும்ப்ளே அல்லது லக்ஷ்மணன் ஆகிய இருவரில் ஒருவரே பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அயல்நாட்டு பயிற்சியாளருக்கும் பிசிசிஐ பெரியளவில் சிந்திக்கவில்லை எனத்தெரிகிறது.