ஐபிஎல் தள்ளி வைப்பு
2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்கி, மே 24இல் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. மார்ச் மாத துவக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. அதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது.
கடும் நஷ்டம்
கடந்த நான்கு மாதமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவுமே நடைபெறவில்லை. அதனால், அனைத்து அணிகளுமே கடும் நஷ்டத்தில் உள்ளன. பிசிசிஐயைப் பொறுத்தவரை சர்வதேச தொடர்களை விட ஐபிஎல் தொடரால் கடும் நஷ்டத்தில் இருந்தது.
துடிக்கும் பிசிசிஐ
2020 ஐபிஎல் தொடர் நடைபெறாமல் போனால் பிசிசிஐக்கு மட்டும் சுமார் 4,000 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது. அதனால், எப்படியாவது ஐபிஎல் தொடரை நடத்தி விட துடித்து வருகிறது பிசிசிஐ. அக்டோபர் மாதம் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
உலகக்கோப்பை சிக்கல்
தற்போது வரை ஐசிசி அமைப்பு, 2020 டி20 உலகக்கோப்பை குறித்து எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. ஆனால், பல நாடுகளை சேர்ந்த அணிகளை ஒன்று திரட்டி டி20 உலகக்கோப்பை தொடரை நடத்துவது இந்த சமயத்தில் மிகவும் சிக்கலானது.
விரும்பவில்லை
தொடரை நடத்த வேண்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகமே தாங்கள் இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரை நடத்த விரும்பவில்லை என கூறி விட்டது. அதே அக்டோபரில் பிசிசிஐ 2020 ஐபிஎல் தொடரை நடத்த முயற்சி செய்து வருகிறது.
அனுமதி கிடைக்குமா?
இந்தியாவில் நடத்தவே முதலில் பிசிசிஐ முடிவு செய்து இருந்தது. ஆனால், இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு பல நாடுகளில் இருந்து வீரர்களை வரவைத்து இந்த தொடரை நடத்த அனுமதி அளிக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாதுகாப்பு கேள்விக் குறி
ரசிகர்கள் இல்லாத மைதானம் என்றாலும் வீரர்கள், ஊழியர்கள் பாதுகாப்பு கேள்விக் குறியாகவே இருக்கும். இந்த நிலையில் வெளிநாடுகளில் ஐபிஎல் தொடரை நடத்தும் முடிவை பிசிசிஐ பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இரண்டு நாடுகள் பிசிசிஐ-யிடம் தங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்துமாறு கேட்டுக் கொண்டு இருந்தன.
இரண்டு நாடுகள்
அந்த இரண்டு நாடுகள் - இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம். ஏற்கனவே, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரின் சில போட்டிகள் நடந்துள்ளன. மறுபுறம் அண்டை நாடான இலங்கையில் அருகருகே மூன்று மைதானங்கள் இருப்பதும் சாதகமான விஷயமாக உள்ளது.
எதிர்ப்பு
வெளிநாட்டில் ஐபிஎல் தொடரை நடத்த சில பிசிசிஐ அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், எப்படியும் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் தான் போட்டிகள் நடக்கப் போகிறது எனும் நிலையில் எந்த நாட்டில் நடந்தால் என்ன? என்ற மனநிலையில் நிர்வாகம் இருப்பதாக கூறப்படுகிறது.