காலவரையின்றி ஒத்திவைப்பு
கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் 2020 தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள், வீரர்கள் அனைவரும் தவித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படுமா என்ற ஐயமும் எழுந்து வருகிறது. அவ்வாறு ரத்து செய்யப்பட்டால் 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அக்டோபரில் ஐபிஎல் போட்டிகள்
இதனிடையே ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18ம் தேதி துவங்கி நவம்பர் 15ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடர் ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஐசிசி வரும் 10ம் தேதி ஆலோசனை மேற்கொண்டு முடிவை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ரத்து செய்யப்பட்டால் அந்த மாதங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
இறுதி முடிவாக இருக்கும்
இதனிடையே ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடத்துவது குறித்தும் பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டதாகவும் ஆனால் அது இறுதி முடிவாகவே இருக்கும் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வெளிநாட்டில் நடத்துவதை தவிர வேறுவழியில்லை என்ற நிலை வந்தால் அதுகுறித்து ஆலோசிக்கப்படும என்றும் கூறியுள்ளன. ஆனால் இந்தியாவில் நடத்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009, 2014ல் வெளிநாட்டில் ஐபிஎல்
ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. கடந்த 2009ல் தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் தொடர் மொத்தமும் நடத்தப்பட்டது. இதேபோல கடந்த 2014ல் யூஏஇ மற்றும் இந்தியாவில் சேர்த்து நடத்தப்பட்டன. எதுவாக இருந்தபோதிலும் டி20 உலக கோப்பை குறித்த ஐசிசியின் முடிவுக்கு பின்பே ஐபிஎல் போட்டிகள் குறித்து தெளிவு கிடைக்கும் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.