Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. அதனால் அனைத்து கிரிக்கெட் அமைப்புகளும் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. இந்தியாவில் 2020 ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
அணிகளின் நஷ்டம்
அனைத்து அணிகளும் நஷ்டத்தில் உள்ள நிலையில், இந்திய அணியை தங்கள் நாட்டில் ஆட வைத்தால் உடனடியாக பணம் கொட்டும் என்பதால் அதற்கு பகீரத முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆஸ்திரேலியா அதில் முந்திக் கொண்டது.
ஆஸ்திரேலியா திட்டம்
அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடக்க திட்டமிடப்பட்டு இருந்த டி20 உலகக்கோப்பை தொடரை கூட நடத்த ஆஸ்திரேலியா தயாராக இல்லை. அது சிக்கலான வேலை. மேலும், அதில் வரும் வருமானத்தை விட இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் அதிக வருமானம் கிடைக்கும் என கணக்கு போட்டது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்
அதன் விளைவு, இந்திய அணியை நவம்பர் மாதம் ஏற்கனவே ஒப்புக் கொண்டதன்படி டெஸ்ட் தொடரில் ஆட வைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ்-க்கு இடையே பாதுகாப்பாக டெஸ்ட் தொடரை நடத்த இப்போதே திட்டமிட்டு, இந்திய அணிக்காக புதிதாக கட்டப்பட ஹோட்டலை முன்பதிவு செய்யவும் பேசி வைத்துள்ளது ஆஸ்திரேலியா.
இலங்கை கிரிக்கெட் நிலை
மறுபுறம் இலங்கை கிரிக்கெட்டின் நிலை ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. அவர்களின் தொலைக்காட்சி உரிமையை வாங்கக் கூட ஆள் இல்லை. அதனால், தங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தவும், இந்திய அணியுடனான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரை நடத்தவும் இலங்கை கிரிக்கெட் போர்டு முயன்று வருகிறது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட்
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போர்டு நிர்வாகி ஜாக்கஸ் ஃபால் சமீபத்தில் கூறுகையில் இந்திய அணி மூன்று டி20 போட்டிகளில் ஆட ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தென்னாப்பிரிக்க அரசு மற்றும் இந்திய அரசு அனுமதி கிடைத்தால் இந்தியா, தென்னாப்பிரிக்காவில் அந்த தொடரை ஆட வாய்ப்பு உள்ளதாக கூறி உள்ளார்.
எளிதான காரியம் அல்ல
ஆனாலும், இந்த தொடர் நடப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. அரசு அனுமதி, பாதுகாப்பான நகரத்தில் உள்ள மைதானம், இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்ற உடன் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் என பல சிக்கல்கள் உள்ளன.
காரணம்
பிசிசிஐ தொடர்ந்து ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா அணிகளுடன் தொடர்பில் இருப்பதை குறிப்பிடும் சிலர் அக்டோபர் மாதம் நடக்க உள்ள டி20 உலகக்கோப்பைக்கு பதில் அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த மற்ற அணிகளின் ஆதரவை பிசிசிஐ பெற்று வருவதாக கூறுகின்றனர்.