கடைசி தொடர்
இந்திய அணி கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் பங்கேற்று இருந்தது. அந்த தொடர் மார்ச் மாதம் முடிவடைந்தது. அதே மாத மத்தியில் தென்னாப்பிரிக்க அணியுடன் இந்தியா ஒருநாள் தொடரில் ஆட இருந்தது.
தென்னாப்பிரிக்க தொடர் ரத்து
தென்னாப்பிரிக்க தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், அடுத்த ஒரு போட்டிகளையும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்தது பிசிசிஐ. அதன் பின் இந்திய அணி இதுவரை எந்த கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கவில்லை.
முடங்கி உள்ளனர்
இந்திய அணி வீரர்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அவர்கள் இதுவரை வீடுகளுக்குள் மட்டுமே சிறிய அளவில் பயிற்சி செய்து வருகின்றனர். இன்னும் முழுமையான கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடவில்லை. அது ஒரு சிக்கலாக மாறி உள்ளது.
இரண்டு மாதம் பயிற்சி
நீண்ட காலம் வீரர்கள் கிரிக்கெட் ஆடாவிட்டால் அவர்கள் குறைந்தது இரண்டு மாதம் பயிற்சி செய்த பின்னரே போட்டிகளில் பங்கேற்க முடியும் என கூறப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அதற்கான சூழல் இல்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
பிசிசிஐ தயங்கி வருகிறது
இந்தியா தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் நான்காம் இடத்தில் உள்ளது. லாக்டவுனில் பெரிய அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் நீடிப்பதால் வீரர்களை வெளியே பயிற்சிக்கு அழைக்க பிசிசிஐ தயங்கி வருகிறது.
அனுமதி அளிக்கவில்லை
மேலும், மத்திய அரசு இன்னும் அணியாக வீரர்கள் பயிற்சி செய்ய அனுமதி அளிக்கவில்லை. தனிப்பட்ட முறையிலேயே பயிற்சி செய்ய அனுமதி உள்ளது. இந்த நிலையில் தான் அடுத்த இரண்டு சுற்றுப் பயணங்களை தள்ளி வைத்துள்ளது பிசிசிஐ.
இரண்டு சுற்றுப்பயணங்கள்
இலங்கை உடனான மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் மற்றும் ஜிம்பாப்வே அணியுடனான மூன்று ஒருநாள் போட்டிகள் ஆகிய தொடர்களை தள்ளி வைத்துள்ளது பிசிசிஐ. இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அபாயம்
அந்த அறிவிப்பில், "இந்திய கிரிக்கெட் அணி கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக இலங்கை மற்றும் ஜிம்பாப்வேவுக்கு பயணம் செய்யாது." என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை தொடர் ஜூன் 24உம், ஜிம்பாப்வே தொடர் 22 ஆகஸ்ட்டிலும் தொடங்க இருந்தது.