மும்பை : ஐபிஎல் போட்டிகள் வரும் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து தொடர்ந்து ஆலோசிப்பதற்காக ஐபிஎல் அணிகளுடன் இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த கான்பரன்ஸ் கால் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஐபிஎல் 2020 சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்குவதாக இருந்தது. ஆனால் உலகெங்கிலும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஐபிஎல்லையும் விட்டு வைக்கவில்லை. அது வரும் 15ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆயினும் அந்த நாளிலும் ஐபிஎல் நடத்தப்படுமா என்பதில் ஐயம் நீடிக்கிறது. இதையொட்டி ஐபிஎல் அணிகளுடன் கான்பரன்ஸ் கால் மூலம் ஆலோசனை நடத்தப்படும் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது.
இந்த ஆண்டு ஐபிஎல்லுக்கு வந்த சோதனை கொஞ்ச நஞ்சமல்ல. ஐபிஎல் மட்டுமல்ல உலகத்துக்கே சோதனை காலகட்டம்தான். கொரோனாவால எல்லா நிகழ்வுகளும் குறிப்பாக விளையாட்டு நிகழ்வுகள் எல்லாமே ஒத்திவைக்கப்பட்டுருக்கு. மக்கள் ரொம்பவே அபாயகரமான காலகட்டத்தை எதிர்கொண்டுக்கிட்டு இருக்காங்க.
இந்தியாவோட அடையாளத்துல ஒண்ணா மாறிக்கிட்டு இருக்கற ஐபிஎல் தொடர், இந்த ஆண்டு நடைபெறுமா என்ற சந்தேகம் அனைத்து தரப்பினரிடையேயும் எழுந்துள்ளது. பல மில்லியன் கோடி ரூபாய் புழங்கும் இடமாக மாறியுள்ளது ஐபிஎல் தொடர். இந்நிலையில் இதை ஒத்தி வைக்கவும் முடியாமல், ரத்து செய்யவும் மனமில்லாமல் தவித்து வருகிறது பிசிசிஐ.
ஒருவழியாக சர்வதேச நெருக்கடி காரணமாக தற்போது ஏப்ரல் 15ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஐபிஎல். இந்த தொடர், தொடர்ந்து நடத்தப்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு சர்வதேச அளவிலும் சற்றும் குறையவில்லை. அதை கட்டுப்படுத்தும் அரசுகளின் முயற்சிகளுக்கு ஓரளவு பலன் இருந்தாலும், முழு பலன் ஏற்படவில்லை.
இந்நிலையில், ஐபிஎல்லின் தலையெழுத்தை தீர்மானிக்கும் வகையில், ஐபிஎல் அணிகளுடன் கான்பரன்ஸ் கால் மூலம் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது பிசிசிஐ. ஆனால் தற்போது அந்தக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே செப்டம்பர் மாதத்திற்கு ஐபிஎல் ஒத்திவைக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.