சுற்றிப் பார்க்க அனுமதி
இதற்கிடையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிம், இங்கிலாந்து தொடருக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் மீதம் இருந்ததால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களுக்கு 10 நாட்கள் பிரேக் கொடுக்கப்பட்டது. இந்த 10 நாள் விடுமுறையில், இங்கிலாந்தில் பல இடங்களை குடும்பத்துடன் சுற்றிப் பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டது.
டுர்ஹாம் டூர்
அந்த இரு வீரர்களில் ஒருவர், ரிஷப் பண்ட் என்று பின்னர் தெரிய வந்தது. அவர் யூரோ கோப்பை கால்பந்து போட்டியை நேரில் சென்று பார்த்து வந்த பிறகு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இப்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பண்ட், வரும் 18ம் தேதி டுர்ஹாம் செல்லும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியுடன் பயணிக்க மட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாரன்டைன்
இந்த சூழலில், இந்திய அணியின் throwdown specialist தயானந்த கராணி என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் நெருக்கமாக இருந்த பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் உட்பட மூன்று நிர்வாகிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களும் வரும் 18ம் தேதி இந்திய அணியின் பயோ-பபுளில் இணையமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எந்நேரமும் மாஸ்க்
இந்நிலையில், நியூஸ் 18 சார்பில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியுடன் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, இந்திய அணி வீரர்கள் பலரும் மாஸ்க் இல்லாமல் குடும்பத்துடன் வெளியே சுற்றுலா சென்றதை காண நேர்ந்தது. அவர்கள் இன்னும் கவனத்துடன் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கங்குலி, "இங்கிலாந்தில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, யூரோ மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளுக்கு கூட்டம் கூட அனுமதிக்கப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தவிர, இந்திய வீரர்கள் விடுமுறையில் இருந்தனர். எந்த நேரமும் அவர்கள் மாஸ்க்குடன் இருப்பது நடைமுறையில் சாத்தியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.