ரசிகர்கள் அதிருப்தி
இந்திய அணிக்கு தற்போது பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. அடுத்த முறையும் அவர் தான் பயிற்சியாளராக இருப்பார் என கூறப்பட்டது. ஆனால் அவரின் பயிற்சியில் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரியை மீண்டும் நியமிக்கக்கூடாது எனத்தெரிவித்து வருகின்றனர்.
கோலி - சாஸ்திரி காம்போ
ரவி சாஸ்திரிக்கு முன்னதாக இந்திய அணிக்கு அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்து வந்தார். ஆனால் அவருடன் கோலிக்கு சரியான புரிதல் ஏற்படவில்லை. அடுத்து வந்த ரவிசாஸ்திரியுடன் கோலி நல்ல காம்போவாக இருந்தது. இதற்கு உதாரணம், கடந்த 2019ம் ஆண்டு ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த பிறகும் கூட அவரையே மீண்டும் பயிற்சியாளராக நீட்டிக்க வேண்டும் என கோலி பரிந்துரைத்தார்.
பெரும் சிக்கல்
இப்படிபட்ட சூழலில் ரவி சாஸ்திரி மீண்டும் ஒருமுறை பயிற்சியாளராக இருக்க கோலி விருப்பம் தெரிவித்தாலும், சாஸ்திரிக்கு இதில் உடன்பாடு இல்லை எனக்கூறப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் அதிகபட்ச வயதுவரம்பு 60 வயதுவரை மட்டுமே. ரவி சாஸ்திரிக்கு தற்போது 59 வயதாகிவிட்டது. இதனால், அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தாலும், ஒரு வருடம் மட்டுமே பயிற்சியாளராக இருப்பார்.
சாஸ்திரி விலகல்?
இதுமட்டுமல்லாமல், பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகவிருப்பதாக ரவி சாஸ்திரி பிசிசிஐ-யிடம் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மட்டுமின்றி மொத்த பயிற்சியாளர்கள் குழுவும் விலகவுள்ளது. பீல்டிங் கோச் ஸ்ரீதர், பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோரும் விலகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சௌரவ் கங்குலி
இந்நிலையில் அடுத்த பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்படுவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பதில் தெரிவித்துள்ளார். அதில் அவர், ராகுல் டிராவிட் தற்போது வரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட தயாராக இல்லை என நினைக்கிறேன். நாங்களும் அவரிடம் இந்த பயிற்சியாளர் பதவி குறித்து எந்தவித ஆலோசனையையும் செய்யவில்லை.
வீரர்கள் எதிர்பார்ப்பு
முக்கிய விஷயம் என்னவென்றால், அவரிடம் அவரது விருப்பத்தை கூட நாங்கள் இதுவரை கேட்கவில்லை அதற்கான நேரம் வரும் போது நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி முடிவுகளை எடுப்பார்கள். எனவே இப்போதைக்கு இதுகுறித்து எதையும் சொல்ல முடியாது. அனைவரும் காத்திருக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.