ஐபிஎல் தொடர்
14வது ஐபிஎல் தொடரில் இதுவரை 29 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 31 போட்டிகள் நடைபெறவேண்டியுள்ளது. இந்த போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் செப்.14ம் தேதி முடிவடைகிறது. இதனால் ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.19ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
வெயில் பிரச்னை
அமீரகத்தில் கடும் வெயில் நிலவி வருவதால் டபுள் ஹெட்டர்ஸ்களை குறைத்து நாட்களை அதிகரிக்கலாம் என்ற முடிவும் பிசிசிஐ-யிடம் உள்ளது. அதாவது மதிய நேரத்தில் வீரர்கள் விளையாடினால் வெயில் கடுமையாக இருக்கும். எனவே செப் 18ம் தேதி முதல் அக்டோபர் 18ம் தேதி வரை போட்டிகளை நடத்தப்படலாம் எனக்கூறப்படுகிறது. எனினும் டி20 உலகக்கோப்பை அக்டோபர் மாதத்தில் வருவதால் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது.
அமீரகம் பயணம்
இந்த அனைத்து பிரச்னைகள் குறித்து அமீரக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கடந்த ஜூன் 2ம் தேதி துபாய் சென்றடைந்தார். அங்கு நடக்கும் பேச்சுவார்த்தையை பொறுத்துதான் ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படும் எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் ஒருபுறம் பேச்சு வார்த்தை நடக்க மறுபுறம் கங்குலி ஜாலி டூர் அடித்து வருகிறார். மேலும் அதுகுறித்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.
இன்பச்சுற்றுலா
அந்தவகையில் சமீபத்தில் துபாயில் ரேஸ் கார் ஒன்றை ஓட்டி மகிழ்ந்துள்ளார் கங்குலி. கார் ஓட்டுவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஐபிஎல் அப்டேட் கேட்டால் ஜாலி டூர் அடித்து வருகிறீர்களே என கிண்டல் செய்து வருகின்றனர். மற்றொரு புறம் கங்குலி அமீரகத்திற்கு சென்ற வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.