ஆசிய கோப்பை தொடர்
அந்த வகையில் ஆசிய கோப்பைக்கான அணியில் பவுலிங் படை அனைவருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் இருந்தது. பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயமடைந்துள்ளதால், இளம் வீரர்களான ஆவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. புவனேஷ்வர் குமார் மட்டுமே அனுபவ வீரராக உள்ளார். பும்ரா இல்லாத சமயத்தில் முகமது ஷமி சேர்க்கப்படாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
பிசிசிஐ-ன் விளக்கம்
இதுகுறித்து விளக்கமளித்திருந்த பிசிசிஐ அதிகாரிகள், முகமது ஷமியை இனி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே பயன்படுத்தவுள்ளதாகவும், டி20 கிரிக்கெட்டில் எந்தவொரு திட்டத்திலும் அவர் சேர்க்கப்பட மாட்டார் எனவும் தெரிவித்தனர். ஐபிஎல் தொடரில் ஷமி சிறப்பாக செயல்பட்ட போதும், இந்த முடிவை தடாலடியாக எடுத்திருந்தனர்.
அந்தர்பல்டி அடித்த பிசிசிஐ
இந்நிலையில் ஷமி மீது பிசிசிஐ திடீரென பாசம் காட்டியுள்ளது. அதாவது டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் முகமது ஷமி இடம்பெறுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஆசிய கோப்பை தொடர் முடிந்தவுடன் இந்திய அணி விளையாடவுள்ள ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க டி20 தொடரில் ஷமிக்கு வாய்ப்பு தர முடிவெடுத்துள்ளனர்.
காரணம் என்ன
ஜஸ்பிரித் பும்ராவின் காயம் மிகவும் தீவிரமாக இருப்பதால், அவர் 3 மாதங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டிய தேவை இருக்கலாம். 2018ல் ஏற்பட்ட இடுப்புவலி பிரச்சினை மீண்டும் ஏற்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக தான் ஷமிக்கு டி20 உலகக்கோப்பையிலாவது வாய்ப்பு தர முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.