கொல்கத்தா: விளையாட்டுத் துறையினருக்கான வழங்கப்படும் விருதுகளில் சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருதை 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் கோச் ராகுல் டிராவிட்டுக்கு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையில் சிறந்த சாதனையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. இந்த விருதுக்கான வீர்ர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கமும் பரிந்துரை செய்யும். அந்த வகையில், அர்ஜூனா விருதுக்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன், மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்திருந்தது.
இந்த நிலையில் ராகுல் டிராவிட், இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்க வேண்டும் என்று பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய இந்திய நெடுஞ்சுவர் ராகுல் டிராவிட் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்தாண்டு துவக்கத்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது. அணிக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்த டிராவிடுக்கு, சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருதை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மிகச் சிறந்த விளையாட்டு ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பெயர் மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2016லும் கோஹ்லி பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், ரியோ ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடிய பிவி சிந்து, சாக் ஷி மாலிக், தீபா கர்மாகர் ஆகியோருக்கு அந்த ஆண்டு விருது வழங்கப்பட்டது.
விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கான தயான் சந்த் விருதுக்கு, கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தங்களுடைய விளையாட்டு காலத்தின்போது அர்ஜூனா விருது பெறாதவர்களுக்கே, தயான்சந்த் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, அர்ஜூனா விருது பெறாத கவாஸ்கரின் பெயரை, தயான் சந்த் விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.