அடுத்த மாதம் துவக்கம்
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த மாதம் 27ம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இதற்கென மாநில அரசு அனுமதி கிடைத்துள்ள நிலையில் குவாரன்டைன் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளுடன் இந்த தொடர் நடைபெறவுள்ளது.
புஜாரா உள்ளிட்டோர் பங்கேற்பு
இதையொட்டி ஐபிஎல் போட்டிகளை முடித்துக் கொண்டு இந்திய அணியினர் நேரிடையாக யூஏஇயில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்நிலையில் ஐபிஎல்லில் பங்கேற்காத சத்தேஸ்வர் புஜாரா, ஹனுமன் விஹாரி உள்ளிட்டவர்கள் தற்போது யூஏஇக்கு வந்துள்ளனர்.
குவாரன்டைனில் ஈடுபடும் வீரர்கள்
அங்கு குவாரன்டைனில் ஈடுபடவுள்ள அவர்கள் மற்ற அணி வீரர்களுடன் ஆஸ்திரேலிய பயணத்தில் பங்கேற்கவுள்ளனர். இதேபோல ஆஸ்திரேலியா செல்லவுள்ள விராட் கோலி தலைமையிலான அணி வீரர்களும் அங்கு குவாரன்டைனில் ஈடுபட உள்ளனர்.
அனுமதிக்க பிசிசிஐ கோரிக்கை
இந்நிலையில் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் வீரர்களின் குடும்பத்தினரை அனுமதிக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் வீரர்களின் குடும்பத்தினரை அனுமதிக்க பிசிசிஐ கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கூடிய விரைவில் இதில் சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.