ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்
ஆசிய கோப்பை தொடருக்காக சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால் இளம் வீரர்களை கொண்ட இந்திய பி அணி களமிறங்குகிறது. இதனை கே.எல்.ராகுல் வழிநடத்தவுள்ளார். இந்த தொடருக்காக ஒருவாரத்திற்கு முன்பாகவே ஹராரே சென்றடைந்த இந்திய அணி அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டிராவிட் இல்லாததால், இந்த அணிக்கு லக்ஷ்மண் பயிற்சி அளித்து வருகிறார்.
பிசிசிஐ சுற்றறிக்கை
இந்நிலையில் வி.வி.எஸ். லக்ஷ்மணுக்கு பிசிசிஐ தேர்வுக்குழு அதிகாரிகளிடம் இருந்து முக்கிய தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த ஜிம்பாப்வே தொடரில் மற்ற வீரர்களின் உடற்தகுதியை விட கே.எல்.ராகுல் மற்றும் தீபக் சஹார் ஆகிய இருவரின் மீது மட்டும் தனி கவனம் செலுத்தி முழு உடற்தகுதியை கொண்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
என்ன காரணம்
காயம் காரணமாக நீண்ட நாட்களாக கிரிக்கெட்டே விளையாடாமல் உள்ள கே.எல்.ராகுல் மற்றும் தீபக் சஹார் இருவருமே ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் நேரடியாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த ஜிம்பாப்வே தொடரில் தங்களின் பழைய ஃபார்மை நிரூபித்தால் மட்டுமே ஆசிய கோப்பையில் சிறப்பாக விளையாட முடியும் என்பதால் பிசிசிஐ இதனை தெரிவித்துள்ளது.
லக்ஷ்மண் பயிற்சி
இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் வி.வி.எஸ்.லக்ஷ்மண் தனி கவனம் செலுத்தி பயிற்சி அளித்து வருகிறார். குறிப்பாக மற்ற வீரர்கள் பயிற்சி முடிந்து சென்ற போதும், தீபக் சஹார் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரை மட்டும் நீண்ட நேரம் வலைபயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறாராம் லக்ஷ்மண். இதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.