ஆகஸ்ட் 15ல் வீரர்கள் பயணம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் யூஏஇயில் நடைபெறவுள்ளது. வரும் செப்டம்பர் 19ம் தேதி துவங்கி நவம்பர் 8ம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக 8 அணிகளை சேர்ந்த வீரர்கள் உள்ளிட்டவர்கள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதியே யூஏஇக்கு செல்லவுள்ளனர்.
பிசிசிஐ பகிர்வு
இதுகுறித்து எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்துள்ளது பிசிசிஐ. இதேபோல எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியமும் அறிக்கை மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் குறித்த விரிவான திட்டத்தை பிசிசிஐ பகிர்ந்துள்ளது. இந்த திட்டம் குறித்து வரும் சனிக்கிழமை கூடவுள்ள ஐபிஎல் நிர்வாக குழுவினர் இறுதி திட்டத்தை முடிவு செய்யவுள்ளனர்.
பிரிஜேஷ் படேல் அறிவிப்பு
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் ஐபிஎல் அணி உரிமையாளர்கள், ஒளிபரப்பாளர்கள் உள்ளிட்டவர்களுடன் மேற்கொள்ளப்படவுள்ள கூட்டத்தில் இந்த இறுதி திட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகவும் ஐபிஎல் நிர்கவாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
தீவிரமாக கடைபிடிக்க அறிவுறுத்தல்
இந்த திட்டத்தின்படி, கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு வழிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் இதை ஐபிஎல் அணிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீரர்கள் மற்றும் ஊழியர்களின், பயணங்கள் உள்ளிட்டவற்றையும் வழக்கம்போல அணி நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும் என்றும் பிசிசிஐ இதற்கு உதவி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிசிசிஐ ஏற்பாடு செய்யும்
இதேபோல மருத்துவ விஷயங்களையும் ஐபிஎல் அணிகளே செய்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய மருத்துவ குழுவை பிசிசிஐ ஏற்பாடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் கூடுதல் வீரர்களை அழைத்து வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு அணிகளுடன் விவாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.