17ம் தேதி நடைபெறுகிறது
பிசிசிஐயின் 4வது நிர்வாகிகள் குழு கூட்டம் வரும் 17ம் தேதி நடத்தப்பட உள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 6ம் தேதி இதன் முந்தைய கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது நடத்தப்படும் இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கூட்டத்தில் ஆலோசனை
மேலும் எல்லையில் சீன ராணுவத் தாக்குதலையடுத்து ஐபிஎல்லில் விவாதத்திற்கு உரியதாக மாறியுள்ள ஸ்பான்ஸர்ஷிப் குறித்தும் இந்த 9 பேர் அடங்கிய நிர்வாகிகள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. கடந்த மார்ச் முதல் வாரத்தில் இந்திய அணி இறுதியாக தன்னுடைய போட்டியை விளையாடிய நிலையில் தற்போது இலங்கை மற்றும் ஜிம்பாப்வே தொடர்களும் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
போட்டிகளை துவக்குவது கேள்விக்குறி
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் துவங்குவதும் கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மட்டுமின்றி உள்ளூர் போட்டிகளை துவக்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கூட்டத்தில் விவாதம்
கிரிக்கெட் வீரர்கள் சிலர் தங்களது பயிற்சிகளை துவங்கியுள்ள நிலையில், அனைத்து வீரர்களுக்கும் பயிற்சிகளை துவக்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலத்தை நீட்டிப்பத குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.