Recommended Video
அர்ஜுனா விருது
வருடா வருடம் அர்ஜுனா விருது விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மற்ற விளையாட்டுக்களோடு கிரிக்கெட் விளையாட்டுக்கும் அர்ஜுனா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த விருதுக்கான பரிந்துரை பட்டியலை தயார் செய்யும் பணியில் உள்ளது பிசிசிஐ.
கடந்த ஆண்டு என்ன நடந்தது?
கடந்த ஆண்டு ஆடவர் அணியில் பும்ரா, முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா என மூன்று வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு அவர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா அர்ஜுனா விருதை வென்றார். அவர்களில் பும்ரா, ஷமி கடந்த ஆண்டு பல்வேறு காரணங்களால் தகுதி பெறவில்லை.
இருவருக்கு தகுதி இல்லை
பும்ரா மூன்று ஆண்டுகள் சர்வதேச அளவில் ஆடி இருக்க வேண்டும் என்ற தகுதியை கடந்த ஆண்டு அடைந்திருக்கவில்லை. முகமது ஷமி, அவரது மனைவியுடன் ஏற்பட்ட மோதலால் கடந்த ஆண்டு அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதனால், அவருக்கும் வழங்கப்படவில்லை.
இருவர் பெயர் பரிந்துரை
இந்த நிலையில் இந்த ஆண்டு இரண்டு கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவர்கள் பும்ரா மற்றும் ஷிகர் தவான். இருவரின் பெயர்களும் இதற்கு முன்னர் அனுப்பப்பட்டு அவர்கள் விருதை வெல்லவில்லை. அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க உள்ளது பிசிசிஐ.
பும்ரா நிலை என்ன?
பும்ரா கடந்த ஆண்டு தகுதி பெறாவிட்டாலும், இந்த ஆண்டு முழு தகுதியை பெற்றுள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 பந்துவீச்சாளர் என்பதோடு டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.
மூத்த வீரர் தவான்
இந்திய அணியின் மூத்த வீரர் தவான் பெயர் 2018ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டு விருது வெல்லவில்லை. அதனால், அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை அனுபவ வீரர் என்ற அடிப்படையில் அவருக்கு வழங்கினால் மட்டுமே வாய்ப்பு உண்டு.
அணியின் மற்ற வீரர்கள்
தற்போது ஆடி வரும் இந்திய அணியில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா, அஜின்க்யா ரஹானே, புஜாரா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் அர்ஜுனா விருது வென்றுள்ளனர். தவானுக்கு இந்த முறையும் விருது கிடைக்கவில்லை என்றால் இனி அவருக்கு கிடைப்பது கடினம் என்றே கூறப்படுகிறது.
மகளிர் அணியில் இருவர்
இந்த ஆண்டு மகளிர் அணியில் இருந்து ஷிகா பாண்டே மற்றும் தீப்தி சர்மா பெயர்களை பரிந்துரை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டனர். அதன் அடிப்படையில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.
இரு விருதுகள் வாங்க திட்டம்
மகளிர் பிரிவு மற்றும் ஆடவர் பிரிவு என இரு பிரிவுகளிலும் தலா ஒரு விருது வாங்க வாய்ப்பு உள்ள நிலையில், அதை முழுமையாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது பிசிசிஐ. அதன் காரணமாகவே இரு பிரிவுகளிலும் இரு வீரர்களின் பெயர்களை பரிந்துரை செய்ய உள்ளது பிசிசிஐ