விளையாட்டுப் போட்டிகள் தடை
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஒலிம்பிக் உட்பட, பல விளையாட்டுப் போட்டிகள் தடைபட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் உலகம் முழுவதும் முடங்கி உள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் முடங்கி உள்ளது.
அச்சத்தில் உள்ளனர்
மற்ற நாடுகளில் கிரிக்கெட் வீரர்கள் சம்பளம் கிடைக்குமா? என்ற அச்சத்தில் தான் உள்ளனர். இந்தியாவை அடுத்து நிதி அளவில் பெரிய கிரிக்கெட் நிர்வாகம் கொண்ட நாடுகள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா. அங்கேயும் சம்பள குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா நிலை
ஆஸ்திரேலியாவில் மத்திய வீரர்கள் ஒப்பந்த அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் நிலைமை சீராகாமல் போனால், ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள குறைப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இங்கிலாந்து வீரர்கள் நிலை
இங்கிலாந்து நாட்டில் கிரிக்கெட் வீரர்கள் அரசு நிவாரணம் பெற்று வருகின்றனர். இரு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா - இருநாட்டு வீரர்களும் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்தும் உள்ளனர்.
பிசிசிஐ அதிரடி
ஆனால், பணத்தில் கொழிக்கும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களுக்கான காலாண்டு தொகை மற்றும் இந்தியா, இந்தியா ஏ அணிக்காக போட்டிகளில் ஆடிய வீரர்கள் சம்பளம் என அனைத்தையும் மார்ச் மாத இறுதிக்குள் கொடுத்து முடித்துள்ளது.
எல்லோருக்கும் சம்பளம் உண்டு
சர்வதேச போட்டிகளில் ஆடும் வீரர்கள் மட்டுமல்ல, உள்ளூர் போட்டிகளில் ஆடும் வீரர்களுக்கும் முழு சம்பளத்தை பிசிசிஐ வழங்கும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். கிரிக்கெட் ஆட முடியாத நிலை அடுத்த சில ஆண்டுகளுக்கு நீடித்தாலும், பிசிசிஐ அவர்களுக்கு சம்பளம் அளிக்கும் எனவும் கூறினார்.
வீரர்கள் ஜாலி
மக்கள் தங்கள் வேலை, சம்பளம், வியாபாரம் எல்லாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு விட்டதே என வருத்தத்தில் இருக்கும் நிலையில், இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் மட்டும் செம ஜாலியாக இருக்கிறார்கள். பணக்கார பிசிசிஐ இருக்கும் வரை அவர்களுக்கு எந்த குறையும் இருக்காது.