தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்
நியூசிலாந்து டெஸ்ட் தொடர் டிசம்பர் 7ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் பின்னர் வரும் டிசம்பர் 8ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகள் என நெடும் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்த தொடருக்காக தான் இந்திய சீனியர் வீரர்களுக்கு தற்போது ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம் ரத்து?
இந்நிலையில் இந்த சுற்றுப்பயணம் ரத்தாகும் சூழல் உருவாக்கியுள்து. தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா தொற்று உருவாகியுள்ளது. - B.1.1.529 என்ற அந்த கொரோனா வைரஸானது தற்போது வேகமாக நாடு முழுவது பரவி வருகிறது. இதனால் இந்திய வீரர்கள் அங்கு செல்வது ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மிகப்பெரும் தொடர்
இந்திய அணி மொத்தம் 7 வாரங்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்து விளையாடவுள்ளது. எனவே அதற்குள் இந்திய வீரர்களுக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிட்டால் சிரமமாகிவிடும் என பிசிசிஐ தயக்கம் காட்டி வருகிறது. குறிப்பாக தற்போது அதிக பாதிப்புகளை கொண்டுள்ள ஜோஹனெஸ்பர்க் மற்றும் ப்ரீடோரியா நகரங்களில் தான் 2 டெஸ்ட் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மேலும் பயம் கூடியுள்ளது.
நாடு திரும்பும் வீரர்கள்
இது ஒருபுறம் இருக்க தென்னாப்பிரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய ஏ அணி வீரர்களையே திரும்பி நாட்டிற்கு அழைக்க பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்க ஏ அணிகள் அதிகாரப்பூர்வமற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அவர்கள் விரைவில் நாட்டிற்கு அழைத்து வரப்படலாம்.
பிசிசிஐ அதிகாரி
இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், தென்னாப்பிரிக்காவில் தற்போதைய நிலவரம் எப்படி உள்ளது என்பது தெரியாமல் தற்போதைக்கு எதையும் கூற முடியாது. இந்திய வீரர்கள் டிசம்பர் 8 அல்லது 9ம் தேதியன்று தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டுவிடும் என கூறியுள்ளார். எது எப்படி இருந்தாலும், மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெற்றால் மட்டுமே இந்திய வீரர்கள் செல்லும் எனத்தெரிகிறது.