தரவரிசையில் 7வது இடம்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சத்தீஸ்வர் புஜாரா இந்தியாவிற்காக மூன்று பிரிவுகளிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். தன்னுடைய தொடர்ந்த திறமையால் ரசிகர்களை கவர்ந்துவரும் புஜாரா டெஸ்ட் தரவரிசையில் 791 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளார். சமீப காலங்களில் இவரது ஆட்டம் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.
சத்தீஸ்வர் புஜாரா பாராட்டு
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வெல்வதால் இந்தியாவிற்கு மிகச்சிறந்த பெருமை கிடைக்கும் என்று புஜாரா தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஏற்படுத்தியுள்ள ஐசிசிக்கு பாராட்டு தெரிவித்துள்ள அவர், இதன்மூலம் கிரிக்கெட்டின் உண்மையான வடிவமான டெஸ்ட் போட்டிகள் சிறந்த இடத்தை பெறும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
முதலிடத்தில் இந்திய அணி
ஐசிசி சார்பில் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகள் நடைபெறும் இந்த தொடரில் 7 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று 360 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவை தொடர்ந்து 296 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 146 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணிகள் முதல் 3 இடங்களில் உள்ளன.
வெற்றி பெறுவது சிறந்தது
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றி கொள்வது போல சிறப்பானது வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள புஜாரா, இதில் தொடர்ந்து முன்னிலை பெற்று இந்தியா கண்டிப்பாக வெற்றி கொள்ளும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், மேற்கு வங்கம் போன்ற நாடுகளின் அணிகளுடன் விளையாடி தொடரை கைப்பற்றிய இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலிடத்தில் நீடிக்க வாய்ப்பு
ஐசிசியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் 10ம் தேதி முதல் 14ம் தேதிவரை நடைபெறவுள்ளது. நியூசிலாந்தில் சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்த அணியுடன் வரும் 21ம் தேதி முதல் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் இந்தியா வெல்லும்பட்சத்தில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்க வாய்ப்புள்ளது.
டி20, ஒருநாள் உலக கோப்பையை விட சவாலானது
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றி பெறுவது என்பது மிகவும் சவாலானது என்றும் குறிப்பிட்டுள்ள புஜாரா, சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் வெற்றி பெறுவதை காட்டிலும் மிகச்சிறந்த சாதனையாக இந்த கோப்பையை தான் கருதுவதாக கூறியுள்ளார். கிரிக்கெட்டில் டெஸ்ட் வடிவம்தான் சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் எந்த வீரரை கேட்டாலும் இதை அவர் ஒப்புக் கொள்வார் என்றும் கூறியுள்ளார்.
மற்ற நாடுகளில் சொதப்பல்
சொந்த மண்ணில் விளையாடும் போட்டிகளை சிறப்பாக விளையாடும் அணிகள், மற்ற நாடுகளில் விளையாடும்போது சொதப்பி வருவதாக தெரிவித்துள்ள புஜாரா, ஆனால் இந்தியா சொந்த மண்ணிலும், மற்ற நாடுகளில் விளையாடப்படும் போட்டிகளிலும் சிறப்பான வெற்றியை தக்க வைத்துக் கொள்வதாக புகழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஐசிசியின் மகத்தான பணி
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நிலைபெற செய்வதற்காக ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாராட்டு தெரிவித்துள்ள புஜாரா, ஐசிசியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மூலம் டெஸ்ட் வடிவம் மேலும் கவனத்தை பெற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளை வெற்றி கொண்டு, புள்ளிகளை பெறுவதற்கு தற்போது அணிகள் தீவிரம் காட்டுவதாகவும் புஜாரா சுட்டிக் காட்டியுள்ளார்.
விமர்சனங்கள் மெருகேற்றுகின்றன
சமீப காலங்களில் புஜாராவின் ஆட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் விமர்சனங்கள் குறித்து தான் கவலைப்படுவதில்லை என்றும், விமர்சனங்களை பாசிட்டிவ்வாக எடுத்துக் கொள்வதாகவும், இதன்மூலம் அதிகமான விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் விமர்சனங்களை தான் கடந்துவர உதவி புரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.