குவாரன்டைனில் பாகிஸ்தான் வீரர்கள்
நியூசிலாந்து -பாகிஸ்தான் இடையில் அடுத்த மாதம் 18ம் தேதி துவங்கி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு பாகிஸ்தான் அணி வீரர்கள் நியூசிலாந்தில் குவாரன்டைனில் உள்ளனர். இதனிடையே பாகிஸ்தான் வீரர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் நேற்று தெரிவித்தது.
சிசிடிவி மூலம் கண்டுபிடிப்பு
இதை நியூசிலாந்து சுகாதாரத்துறையும் உறுதி செய்துள்ளது. நியூசிலாந்தில் அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக அங்கு 2 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்புகளே உள்ளன. இந்நிலையில் விதிமுறைகளை மீறி பாகிஸ்தான் வீரர்கள் செயல்பட்டது சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
டூர் கேன்சல் செய்யப்படும் என எச்சரிக்கை
மேலும் கொரோனா கட்டுப்பாடுகளில் நான்கைந்து விதிமுறைகள் காணப்படுவதாகவும் அடுத்ததாக பாகிஸ்தான் வீரர்கள் கட்டுப்பாடுகளை மீறினால் டூர் கேன்சல் செய்யப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சிஇஓ வாசிம் கானுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அக்தர் எச்சரிக்கை
இந்நிலையில், பாகிஸ்தான் ஒன்றும் கிளப் அணி இல்லையென்றும், தேசிய அணியிடம் பேசும்போது முறையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் பாகிஸ்தான் பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், டூரை கேன்சல் செய்வோம் என்று எவ்வாறு கூறலாம் என்றும் அவர் காட்டம் தெரிவித்துள்ளார்.
சகாப்தம் முடிந்து விடாது
தங்களுக்கு நியூசிலாந்துடன் விளையாட வேண்டிய அவசியம் இல்லை என்றும், அந்த அணியுடன் தங்களது சகாப்தம் முடிந்துவிடாது என்றும் அவர் மேலும் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த தொடரின் ஒளிபரப்பால் வரும் நிதி நியூசிலாந்திற்கு தான் செல்லும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அக்தர் காட்டம்
இந்த தொடர் குறித்து பாகிஸ்தானிடம் நியூசிலாந்து அணிதான் முதலில் பேசியதாகவும், அதனால் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளுமாறும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்தமுறை இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடும் முன்பாக கவனமாக இருக்குமாறும் அவர் மேலும் கூறினார்.