தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து டெஸ்ட்
தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்க்ஸில் 284 ரன்கள் குவித்தது. டி காக் 95 ரன்கள் குவித்தார்.
இங்கிலாந்து தடுமாற்றம்
அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 181 ரன்கள் மட்டுமே எடுத்து முதல் இன்னிங்க்ஸில் பின்னடைவை சந்தித்தது. பேட்டிங் செய்ய கடினமான சென்சுரியன் ஆடுகளத்தில் இரண்டாம் இன்னிங்க்ஸில் தென்னாப்பிரிக்க அணியை விரைவாக கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் இருந்தது இங்கிலாந்து.
தென்னாப்பிரிக்கா அசத்தல் ஆட்டம்
எனினும், தென்னாப்பிரிக்கா அணி இரண்டாம் இன்னிங்க்ஸிலும் தாக்குப் பிடித்து ஆடி 272 ரன்களை குவித்தது. இரண்டாம் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து பந்து வீசிக் கொண்டு இருந்த போது தான் அந்த சம்பவம் நடந்தது.
வாக்குவாதம் வெடித்தது
வெற்றி இலக்கு 300-ஐ தாண்டி சென்று கொண்டிருந்த போது, சிறிய இடைவேளையின் போது இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - ஸ்டூவர்ட் பிராடு இடையே வாக்குவாதம் வெடித்தது.
ஸ்டோக்ஸ் கோபமடைந்தார்
இங்கிலாந்து வீரர்கள் போட்டி குறித்து பேசி வந்தனர். அப்போது ஸ்டூவர்ட் பிராட் போட்டி சூழ்நிலை குறித்து தன் கருத்துக்களை கூறினார். பிராட் சொன்ன அந்த விஷயத்தில் ஸ்டோக்ஸ் கோபமடைந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது.
பிராட் அமைதி
துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரரான ஸ்டூவர்ட் பிராட் மீது பாய்ந்தார். அதையடுத்து, பிராட் விளக்கம் அளிப்பது போல பேசினார். பின் அமைதியாக இருந்தார்.
கேப்டன் ஜோ ரூட் என்ன செய்தார்?
எனினும், பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து கோபமாக பேசி வந்தார். இந்த சம்பவங்கள் நடைபெற்ற போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்.
வர்ணனையாளர்கள் கருத்து
இந்த சம்பவம் நடந்த போது நேரலையில் வர்ணனை செய்து கொண்டிருந்த மைக்கேல் ஹோல்டிங் மற்றும் நாசர் உசேன் இந்த பரபரப்பான சம்பவம் பற்றி கூறினர். ஹுசைன் "அதை நான் பொருட்படுத்தவில்லை" என்றாலும், ஹோல்டிங் "இது விரைவில் முடிவடையும்" என்று நம்புவதாக கூறி இங்கிலாந்து அணியில் பிரச்சனை இருப்பதை சுட்டிக் காட்டினார்.
மைக்கேல் ஹோல்டிங் என்ன சொன்னார்?
மைக்கேல் ஹோல்டிங் கூறுகையில், "அது மிகவும் நட்பான உரையாடலாக தெரியவில்லை. எதனால் இந்த பிரச்சனை வந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது விரைவில் முடிவடையும் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
|
நான் பொருட்படுத்தவில்லை
நாசர் உசேன் கூறுகையில், "வெப்பமான வானிலை காரணமாக இங்கிலாந்து அணி சிறப்பாக உணரவில்லை. சில தடித்த வார்த்தைகள் பகிரப்பட்டது உண்மை தான். பிராட் ஏதோ சொன்னார். அதனால் ஸ்டோக்ஸ் கோபம் அடைந்தார். ஆனால், அதை நான் பொருட்படுத்தவில்லை" என்றார். இந்த பரபரப்புக்குப் பின் போட்டியின் பின் பகுதியில், ஸ்டோக்ஸ் - பிராட் சந்தித்துக் கொண்ட போது புன்னகையுடன் சாதரணமாக நடந்து கொண்டதை அடுத்து இங்கிலாந்து ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.