லண்டன் : ஐபிஎல் போட்டிகளை விளையாட தான் தயாராக உள்ளதாகவும் 3 வாரங்கள் காத்திருக்க முடியாது என்றும் இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை குறைக்கும்வகையில் இந்தியாவில் நேற்று முன்தினம் இரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல்லின் இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பென் ஸ்டோக்ஸ் விளையாடவுள்ளார். இந்நிலையில் வரும் ஏப்ரல் 20ம் தேதி ஐபிஎல் போட்டிகள் துவங்கி தான் விளையாடுவேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2020 சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் திட்டமிடப்பட்டிருந்தது. ஐபிஎல் நிர்வாகமும் இதற்கென முன்னேற்பாடுகளை ஜரூராக செய்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தொடரை தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதையடுத்து வரும் 15ம் தேதிவரை தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு, 13 இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்று ஆடவுள்ளனர். அதில் ஒருவர் இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். கொரோனா வைரஸ் காரணமாக அந்த நாட்டின் அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இலங்கையில் இங்கிலாந்து மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தான் அடுத்ததாக விளையாடவுள்ள தொடராக ஐபிஎல் இருக்கும் என்று தான் நம்புவதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இந்த தொடர் நடக்க வாய்ப்புகள் குறைவு என்று தனக்கு தெரிந்த போதிலும், ரத்து குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாததால் வரும் ஏப்ரல் 20ம் தேதி இந்த தொடர் துவங்கி தான் பங்கேற்று ஆடுவேன் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளுக்காக தான் தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளை விளையாட 3 வாரங்கள் தன்னால் காத்திருக்க முடியாது என்றும், ஐபிஎல் தொடர் துவங்குவது குறித்த அறிவிப்பு வெளியானவுடன் தான் உடனடியாக அதில் பங்கேற்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த இங்கிலாந்தின் பயணம் ரத்து செய்யப்பட்டபோது, அனைத்து வீரர்களும் அதிர்ச்சி அடைந்ததாகவும், ஆனால் இத்தகைய சூழலில் அது சரியான முடிவு என்றும் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டுள்ளார். எதைக்காட்டிலும், உடல்நலம் மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.