பாகிஸ்தான் புகார்
அந்தப் போட்டியில் இந்தியா வேண்டுமென்றே தோல்வி அடைந்து பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறுவதை தடுத்ததாக சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் அப்போது புகார் கூறி இருந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் அந்த சர்ச்சையை மீண்டும் கிளறி விட்டுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து போட்டி
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 2019 உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜேசன் ராய் 66, பேர்ஸ்டோ 111, ஜோ ரூட் 44, பென் ஸ்டோக்ஸ் 79 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 337 ரன்கள் குவித்தது.
ரோஹித் - கோலி ஆட்டம்
அடுத்து சேஸிங் செய்யத் துவங்கிய இந்திய அணியில் ராகுல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் ரோஹித் சர்மா - விராட் கோலி இணைந்து 138 ரன்களுக்கு கூட்டணி அமைத்தனர். விக்கெட் இழக்காமல் 28வது ஓவர் வரை ஆடினாலும் அவர்கள் 338 ரன்களை சேஸ் செய்வதை மனதில் வைத்து அதிரடி ஆட்டம் ஆடவில்லை. ரோஹித் 102, கோலி 66 ரன்கள் எடுத்தாலும், அவர்கள் ஸ்ட்ரைக் ரேட் 96, 86 என்பதாகவே இருந்தது.
தோனி நிதானம்
65 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய தோனி சிக்ஸ், ஃபோர் அடிக்க முயற்சி செய்யாமல் அதிக சிங்கிள் ரன் எடுத்துக் கொண்டிருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய கேதார் ஜாதவ்வும் கடைசி 5 ஓவர்களில் சிங்கிள் ரன் எடுப்பதில் தான் ஆர்வமாக இருந்தார்.
விமர்சனம்
அந்தப் போட்டியில் தோனி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடவில்லை என பலரும் கடும் விமர்சனம் செய்தனர். அந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் அணி அரை இறுதி வாய்ப்பை இழந்தது. அதனால், சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வேண்டுமென்றே தோல்வி அடைந்ததாக அபாண்டமான குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
பென் ஸ்டோக்ஸ் கருத்து
இந்த நிலையில், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆட்டம் மர்மமாக இருந்தது எனவும், தோனி, கேதார் ஜாதவ் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடவில்லை எனவும் கூறி பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார் பென் ஸ்டோக்ஸ். தான் எழுதி உள்ள "ஆன் ஃபயர்" என்ற புத்தகத்தில் இந்த தகவல்களை அவர் கூறி உள்ளார்.
மர்மமாக இருந்தது
"ரோஹித் சர்மா, விராட் கோலி ஆடிய விதம் மர்மமாக இருந்தது. நாங்கள் நன்றாக பந்து வீசினோம் என்பது எனக்கு நினைவில் உள்ளது. ஆனாலும், அவர்கள் ஆடியது வினோதமாக இருந்தது. அவர்கள் தங்கள் அணியை மிகவும் பின் தங்க வைத்தார்கள். எங்கள் அணிக்கு எந்த விதத்திலும் அவர்கள் அழுத்தம் அளிக்கவில்லை." என கூறி உள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
தோனி ஆடிய ஆட்டம்
"தோனி 11 ஓவரில் 112 ரன்கள் தேவை என்ற நிலையில் வந்து ஆடியது இன்னும் விசித்திரமாக இருந்தது. அவர் சிக்ஸ் அடிப்பதை விட சிங்கிள் ரன் எடுப்பதில் தான் ஆர்வமாக இருந்தார். 12 பந்துகள் மீதமிருந்த போது கூட இந்தியா வென்று இருக்க முடியும்." என்றார் ஸ்டோக்ஸ்.
நோக்கம் இல்லை
மேலும், "ஆனால், குறைந்த அளவு அல்லது சுத்தமாக வெற்றி பெறும் நோக்கமே தோனி மற்றும் அவரது சக ஆட்டக்காரர் கேதார் ஜாதவ்விடம் இல்லை" என கூறி அதிரடி புகாரை கிளப்பி உள்ளார் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.
சர்ச்சையை கிளப்பி உள்ளது
பென் ஸ்டோக்ஸ் இந்த விஷயங்களை எழுதியதன் மூலம் தன் புத்தக விற்பனையை அதிகரித்துக் கொள்வார் என்றாலும், அவரது குற்றச்சாட்டு, பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறிய சர்ச்சை புகாரை மீண்டும் கிளறி விடுவதாக உள்ளது.