மீண்டும் துவங்கிய போட்டி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் 4 மாத காலமாக கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ளன. இதனால் சர்வதேச கிரிக்கெட் சமூகம் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கிரிக்கெட் வீரர்களும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
மீண்டும் துவங்கிய போட்டி
இந்நிலையில் 4 மாத இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையில் சௌதாம்ப்டனில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துவங்கியுள்ளது. கொரோனா தொற்றையடுத்து ஐசிசி இந்த போட்டிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் சமூகத்தின் பார்வை இந்த போட்டியில் பதிந்துள்ளது.
சிறப்பான ஆட்டம்
இந்த பெரிய அளவிலான மாற்றத்துடன் மீண்டும் துவங்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கு தானும் தன்னுடைய அணி வீரர்களும் தயாராக உள்ளதாக இன்றைய ஆட்டத்தில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் ரசிகர்களின் பார்வை இந்த போட்டியில் உள்ளதால் அதற்கு நியாயம் செய்யும் வகையில் தங்களது ஆட்டம் தரமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தரத்தில் மாற்றம் இருக்காது
மைதானத்தில் ரசிகர்கள் இல்லை என்பதால் ஆட்டத்தின் தரத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிறைய பேர்களுக்கு இது மிகப்பெரிய நிகழ்வு என்று கூறியுள்ள ஸ்டோக்ஸ், டிவியில் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த போட்டிகள் ஏமாற்றத்தை அளிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.