பென் ஸ்டோக்ஸ்
அந்த விவகாரம் உலகக்கோப்பை தொடருடன் முடிந்ததாக கருதிய நிலையில், வேறு வகையில் அதை ஆரம்பித்து வைத்தார் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ். அவர் எழுதிய புத்தகம் ஒன்றில் அந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் ஆடிய விதம் குறித்து அவர் விளக்கி இருந்தார் .
இந்தியா தோல்வி
அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணி அதிரடி ஆட்டம் ஆடி 337 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி நிதான ஆட்டம் ஆடி ரன் ரேட் அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டது. முடிவில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பரபரப்பை கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்
அந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, தோனி ஆகியோர் பேட்டிங் செய்த விதம் பற்றி பென் ஸ்டோக்ஸ் கூறிய வார்த்தைகள் பரபரப்பை கிளப்பியது. மர்மமாக ஆடியதாகவும், வெற்றி பெறும் நோக்கம் இன்றி ஆடியதாகவும் கூறி இருந்தார்.
ரன் ரேட்
இங்கிலாந்து அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் ரோஹித் சர்மா சதமும், கோலி அரைசதமும் அடித்து இருந்தனர். இருவரும் 138 ரன்களுக்கு கூட்டணி அமைத்து ஆடி இருந்தனர். ஆனால், அவர்கள் 338 ரன்களை சேஸ் செய்த நிலையில் அதிக ரன் ரேட்டில் ரன் குவிக்கவில்லை.
தோனியின் நோக்கம்
அது பற்றி தன் புத்தகத்தில் எழுதி இருந்த பென் ஸ்டோக்ஸ், ரோஹித் சர்மா - விராட் கோலி பேட்டிங் மர்மமாக இருந்தது என குறிப்பிட்டு இருந்தார். கடைசி 65 பந்துகளில் 112 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி பேட்டிங் செய்ய வந்தார். தோனியும் சிங்கிள் ரன் எடுப்பதில் தான் ஆர்வம் காட்டினார். அது குறித்து குறிப்பிட்ட பென் ஸ்டோக்ஸ் தோனி வெற்றி பெறும் நோக்கத்தில் பேட்டிங் செய்யவில்லை. அவர் சிக்ஸ் அடிப்பதை விட சிங்கிள் ரன் எடுக்கவே அதிகம் முயன்றார் என கூறி இருந்தார்.
பாகிஸ்தான் குற்றச்சாட்டு
பென் ஸ்டோக்ஸ் கூறி இருந்த இதே வார்த்தைகளை கூறி அப்போது முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள், இந்திய அணி வேண்டும் என்றே அந்தப் போட்டியில் தோற்றதாக கூறி இருந்தனர். அதன் மூலம் பாகிஸ்தான் அணியை அரை இறுதி செல்ல விடாமல் இந்தியா தடுத்ததாக குற்றம் சுமத்தினர்.
சிக்கந்தர் பக்த்
தற்போது அந்தப் போட்டியில் ஆடிய இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கூறியதை வைத்து மீண்டும் பழி சுமத்தி உள்ளார் முன்னாள் வீரர் சிக்கந்தர் பக்த். இந்திய ரசிகர்கள் பலர் அது உண்மை இல்லை என கூறி உள்ளனர். பென் ஸ்டோக்ஸ்-உம் அவரது கருத்தை மறுத்து, கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
முன்பே ஊகித்து இருந்தோம்
சிக்கந்தர் பக்த் ட்விட்டரில், பென் ஸ்டோக்ஸ் தன் புத்தகத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் வேண்டும் என்றே தோல்வி அடைந்ததாக எழுதி உள்ளார். இதை நாங்கள் முன்பே ஊகித்து இருந்தோம் என குறிப்பிட்டு இருந்தார். அவர் உலகக்கோப்பை போட்டிக்கு பின் நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் தான் அதே கருத்தை கூறி இருந்த வீடியோவையும் பகிர்ந்து இருந்தார்.
ஆதாரம்
ஆனால், பென் ஸ்டோக்ஸ் இந்தியா வேண்டும் என்றே தோல்வி அடைந்ததாக எங்கேயும் குறிப்பிடவில்லை என இந்திய ரசிகர்கள் கூறி அவரை விமர்சித்து வந்தனர். ஒரு ரசிகர் பென் ஸ்டோக்ஸ் எங்கே அப்படி எழுதி இருக்கிறார் என காட்ட முடியுமா? என ஆதாரத்தை கேட்டு இருந்தார்.
பென் ஸ்டோக்ஸ் பதிலடி
அந்த பதிவின் கீழ் பதில் அளித்துள்ள பென் ஸ்டோக்ஸ், அதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. ஏனெனில் நான் அப்படி சொல்லவே இல்லை. இதற்கு பெயர் வார்த்தையை மாற்றிச் சொல்வது அல்லது கிளிக்பெயிட் என குறிப்பிட்டு அந்த முன்னாள் பாகிஸ்தான் வீரருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.