பெருந்தொற்று நோய்
கொரோனா வைரஸ் ஒரு பெருந்தொற்று நோய். பாதிக்கப்பட்ட மனிதர்கள் மூலம் பிற மனிதர்களுக்கு வேகமாக பரவி வருகிறது. அதனால், மக்கள் பொது வெளியில் அதிகமாக கூட வேண்டாம் என்றும், மக்கள் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் உலகம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லாக்டவுன்
இந்தியா உட்பட பல நாடுகளில் லாக்டவுன் அமலில் உள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை உள்ளது. இந்த கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்களை பாரட்ட பல்வேறு நடைமுறைகளை அரசுகள் கையாண்டு வருகின்றன.
உற்சாகம் செய்யும் நிகழ்வு
குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் அனைவரும் வீட்டு வாசலில் நின்றோ, பால்கனியில் நின்றோ கை தட்டி அவர்களை உற்சாகம் செய்து வருகிறார்கள். சில நாட்கள் முன்பு இந்தியாவில் பிரதமர் மோடி மாலை ஐந்து மணிக்கு அனைவரும் கை தட்டுமாறு கூறி இருந்தார்.
கூட்டம் கூட்டமாக கூடினர்
அதை பெரும்பாலான மக்கள் செய்தனர். ஆனால், சில இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி கை தட்டினர். சில இடங்களில் வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் சென்று உற்சாகம் செய்தனர். ஆக மொத்தத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதையோ, மக்கள் கூட்டம் கூட்டமாக சேரக் கூடாது என்பதையோ யாரும் கண்டு கொள்ளவில்லை.
இங்கிலாந்து நிகழ்வு
அதனால், அது போன்ற உற்சாகப்படுத்தும் நிகழ்வுகளை அரசுகள் வலியுறுத்தாமல் இருப்பதே நல்லது என்ற எண்ணம் உள்ளது. ஆனால், இங்கிலாந்தில் மருத்துவ சேவை செய்வோரை பாராட்ட இதே போன்ற கை தட்டும் நிகழ்வு திட்டமிடப்பட்டது.
|
அதிர்ச்சி
அந்த குறிப்பிட்ட நேரத்தில் லண்டன் பாலத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் கைதட்டி தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஆனால், சமூக இடைவெளியை பற்றி சிந்திக்காமல் இத்தனை மக்கள் கூடியதை கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பென் ஸ்டோக்ஸ் விளாசல்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், "நாம் இன்று இரவு பாலத்துக்கு செல்வோம். கூட்டமாக இருக்கும் மக்களுடன் மருத்துவ ஊழியர்களுக்கு நம் ஆதரவை தெரிவிப்போம். கேமராவில் கை தட்டுவது தெரியும் வரை, மற்ற மக்களுக்கு ஆபத்து ஏற்படுவது முக்கியமல்ல.. சீரியஸ் ஆகவா?" என கேட்டு தன் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.