சூப்பர் ஸ்டார் வீரர்கள்
2000ம் ஆண்டு காலக்கட்ட தொடக்கத்தில் சச்சின் எனும் ஒற்றை ஆளுமையை நம்பியிருந்த இந்திய அணிக்கு, கங்குலி கேப்டனானது ஒரு வரப்பிரசாதம் எனலாம். இந்திய அணியில் அவர் விதைத்த விதைகள் ஏராளம். யுவராஜ் சிங், தோனி, ஜாகீர் கான், ஷேவாக் என்று அறிமுகம் செய்த வீரர்கள் நிறைய பேர் சூப்பர் ஸ்டார்ஸ்களாகிவிட்டனர்.
நான் பொறுப்பேற்கிறேன்
இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமெனில், சூதாட்ட புகாரில் சிக்கி இந்திய அணி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த காலம் அது. அசாருதீன், ஜடேஜா ஆகிய முக்கிய தலைகள் அணியில் இருந்து நீக்கப்பட, சச்சினும் கேப்டன் பொறுப்பேற்க மறுத்துவிட்டார். அப்போது, ஒற்றை ஆளாய் நம்பிக்கையுடன், தைரியத்துடன் கையை உயர்த்தி, நான் பொறுப்பேற்கிறேன் என்று முன்வந்து நின்றவர் சவுரவ் கங்குலி. இனி இந்திய அணி மீள்வது கடினம் என்று சூளுரைத்தவர்கள் முன்பு, இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தத் தொடங்கினார்.
இறுதிப் போட்டி வரை
குறிப்பாக, 2003 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை இந்திய அணி முன்னேறியது, கங்குலி கேப்டன்சியின் உச்சம் எனலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, கங்குலி செய்த மிகச் சிறந்த சாதனை, தோனியை ஒன் டவுன் இறக்கி முயற்சி செய்தது. பாகிஸ்தானையும் எதிராக நடந்த ஒருநாள் தொடரில், தோனி ஒன் டவுன் இறங்கி தன் முதல் ஒருநாள் சதத்தை அடித்ததை யாரால் மறக்க முடியும். அதேபோல், இலங்கைக்கு எதிராகவும் ஒன் டவுன் இறங்கி 183 ரன்கள் விளாசினார் மகேந்திர சிங் தோனி. இந்த பெருமை அனைத்தும் கங்குலியையே சாரும்.
அரைமணி நேரம் வரை
இத்தனை பெருமைக்குரிய கங்குலி இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், தற்போது பிசிசிஐ தலைவராகவும் இருக்கும் கங்குலியின் வீட்டிற்கே இன்று மாலை நேரடியாக சென்ற மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மாலை 5 மணியளவில், கங்குலி வீட்டிற்கு வந்த முதல்வர் மம்தா, அங்கு கங்குலி மற்றும் அவரது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அரைமணி நேரம் வரை இந்த சந்திப்பு நீடித்தது. இடையில் முதல்வருக்கு பலகாரங்களும் பகிரப்பட்டன. கங்குலியின் வீட்டுக்கு முதல்வரே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருப்பது தான் மேற்கு வங்கத்தில் தற்போது ஹாட் நியூஸ்.