கோப்பையை வெல்லாத ஆர்சிபி
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல்லில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை. இறுதிப்போட்டி வரை முன்னேறினாலும் அவர்களால் கோப்பையை பெற முடியவில்லை. கடந்த 2016ல் கூட இறுதிப்போட்டி வரை விளையாடியும் கோப்பையை வெல்லவில்லை.
விராட் கோலி மகிழ்ச்சி
இந்நிலையில் கடந்த 2016க்கு பிறகு தற்போதுதான் அமைதியாகவும் சிறப்பாகவும் உணர்வதாக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆர்சிபியின் யூடியூப் நிகழ்ச்சியான போல்ட் டயரீசிற்காக பேசிய விராட் கோலி, வரும் 19ம் தேதி முதல் துவங்கவுள்ள ஐபிஎல் சீசன் குறித்த பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
ஏபி டீ வில்லியர்ஸ் ஒத்த கருத்து
இந்த சீசன் சிறப்பாக அமையும் என்ற கருத்தை அணியின் ஏபி டீ வில்லியர்சும் உணர்ந்து தன்னிடம் தெரிவித்ததாகவும் விராட் கோலி கூறினார். மற்ற சீசன்களைவிட தற்போதைய சீசனில்தான் தான் எந்த சுமையும் இன்றி ரிலாக்சாக உணர்வதாகவும் கோலி தெரிவித்தார். அணியில் சிறப்பான பல்வேறு திறன்களை கொண்ட வீரர்கள் உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.
நம்பிக்கை அளிக்கும் வீரர்கள்
தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் நிர்வாகத்தினர் இணைந்து இந்த அமைதியை தனக்கு மட்டுமின்றி அனைத்து வீரர்களுக்கும் வழங்கியுள்ளதாகவும் கோலி குறிப்பிட்டுள்ளார். மைக் ஹெசன் வீரர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பாலமாக செயல்படுவதாகவும் கோலி தெரிவித்தார். கிறிஸ் மோரீஸ், ஆரோன் பின்ச், ஜோஷ் பிலிப் போன்றவர்களும் நம்பிக்கை அளிப்பதாக கோலி தெரிவித்தார்.