இலங்கை செல்ல தயார்
ஆனால், இந்த டூரில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை. அதற்கு பிசிசிஐ சொன்ன காரணம், 'அவரால் இன்னும் பவுலிங் செய்ய முடியவில்லை' என்பது. ஐபிஎல் வரை ஆக்ரோஷமாக சிக்ஸர்களை பறக்கவிட்ட பாண்ட்யாவுக்கு, இங்கிலாந்து டூரில் இடம் கிடைக்கவில்லை. காரணம், அவரது நீண்ட கால முதுகு வலி. அவரால் பேட்டிங் செய்ய முடியும், ஆனால் பவுலிங் பண்ண முடியாது. அதனால் தான் அவரை கழட்டிவிட்டது பிசிசிஐ. இப்போது இலங்கைக்கு எதிரான டூருக்கு இந்திய 'பி' அணியுடன் செல்ல தயாராகி வருகிறார்.
10ல் 3 சிக்ஸர்
அதே சமயம், பிசிசிஐ 'இது வேலைக்கு ஆகாது' என்று நினைத்ததோ என்னவோ, இப்போது ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர்களுக்கான வலையை விரித்துள்ளது. இதில், பிசிசிஐ-யின் முதல் பார்வை ஷர்துள் தாகூர் மீது தான். ஐபிஎல் ஆனாலும் சரி.. சர்வதேச போட்டி என்றாலும் சரி, எப்போது இறக்கிவிட்டாலும் சிக்ஸர்களை பறக்கவிடுகிறார் ஷரதுள். 10 பந்துகளை சந்தித்தால் அதில் குறைந்தபட்சம் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகள் வந்துவிடுகிறது. பவுலிங்கில் முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்கிறார்.
ஷர்துள் தாகூர்
இந்நிலையில், இந்திய அணியின் பவுலிங் கோச் பரத் அருண் பிடிஐ-க்கு அளித்துள்ள பேட்டியில், "தன்னால் ஒரு ஆல் ரவுண்டராக செயல்பட முடியும் என்பதை ஷர்துல் தாகூர் நிரூபித்துவிட்டார். ஆஸ்திரேலியாவில் அவரது செயல்பாடு அட்டகாசமாக இருந்தது. ஹர்திக் பாண்ட்யா அபார திறமை வாய்ந்தவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் முதுகு வலிக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிட்டது. அதன் பிறகு திரும்பி வருவது எளிதானது விஷயம் அல்ல. ஆகையால், இப்போதைக்கு அவர் தனது உடல் வலிமையை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆகையால், இப்போது நாம் ஒரு ஃபாஸ்ட் பவுலிங் ஆல்-ரவுண்டர்களை உருவாக்க வேண்டும். உள்ளூர் கிரிக்கெட்டில் நிச்சயம் சில வீரர்கள் இருப்பார்கள். ஆனால், நாங்கள் எப்போதும் இந்திய அணியுடனேயே பயணிப்பதால், உள்ளூர் ஆல்-ரவுண்டர்களை கண்டறியும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை" என்றார்.
தேடி வரும் பிசிசிஐ
ஆக.. ஹர்திக் பாண்ட்யாவுக்கு மாற்று தேட ஆரம்பித்துவிட்டது பிசிசிஐ. அவர் திறமையான வீரர் என்றாலும், அவரால் முன்பு போல் மீண்டு வந்து ஆல்-ரவுண்டர் பெர்ஃபாமன்ஸ் கொடுக்க முடியுமா? அப்படியே கொடுத்தாலும், அவர் மேற்கொண்டு காயம் வராமல், கன்சிஸ்டன்ட்டாக விளையாட முடியுமா? போன்ற கேள்விகளுக்கு இப்போதே இந்திய அணி நிர்வாகம் விடை தேட துவங்கிவிட்டது. லோ ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேன் என்பதை விட, ஆல் ரவுண்டர் என்பதே பாண்ட்யாவுக்கான மதிப்பு. அதில், பவுலிங் ஆப்ஷனை இழந்துவிட்டால், அணியில் அவருக்கான இடத்திற்கு போட்டி அதிகமாகிவிடும். ஏனெனில், சிக்ஸர்களை பறக்க விட நம்மூரில் தெருவுக்கு 20 இன்ஜினியர்கள் இருப்பது போல, பேட்ஸ்மேன்கள் குவிந்து கிடக்கின்றனர். ஹர்திக் ஆல்-ரவுண்டராக இருக்கும் வரையே மதிப்பும், இடமும் என்றால் அது மிகையாகாது!.