லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே இன்று உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டம் பிர்மிங்காம் நகரில் துவங்கியுள்ளது.
இந்த போட்டி பலவகைகளிலும் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. குறிப்பாக இங்கிலாந்து அணியை பொறுத்தளவில் இது வாழ்வா சாவா என்ற போட்டி ஆகும். இந்திய அணியை பொறுத்தளவில் அது இன்று மட்டும் புது ஜெர்ஸியில் விளையாடுகிறது. அது காவி நிறத்தில் இருப்பதாக கூறி நெட்டிசன்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளனர். இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் நிறத்தை போல அந்த ஜெர்சி இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஜெர்சியின் பின்னால், ஜெய் ஸ்ரீராம், என்று எழுதி விட்டால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறியதையும் கவனிக்க முடிந்தது. இந்த நிலையில் இன்று போட்டி ஆரம்பித்ததும், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்திய தேசிய கீதம் இசைத்து முடிக்கப்பட்ட பிறகு, மைதானத்திலிருந்து கோரசாக, "பாரத் மாதா கி ஜே" என்ற கோஷம் எதிரொலித்தது.
ஏற்கனவே, இதே போன்ற கோஷம், லோக்சபாவில் திமுக உறுப்பினர்கள் பெரியார் பெயரைச் சொல்லி பதவி பிரமாணம் எடுத்த போதும், பாஜக எம்பிக்களால் முழங்கப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து மைதானத்திலும், அதுவும் காவி நிற ஜெர்ஸியில் இந்திய அணி இன்று களமிறங்கிய போதும், இதே போன்ற கோஷம் முழங்கியது குறிப்பிடத்தக்கது.