ஐசிசி தேர்வு
ஐசிசி மார்ச் மாதத்திற்கான வீரர் தேர்வு நடத்தப்பட்டு தற்போது விருதுக்கான வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு மாதத்திற்கான வீரர் மற்றும் வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
வீரர்கள் அறிவிப்பு
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயலாற்றும் வீரர்கள் 3 பேர் பரிந்துரைக்கப்பட்டு அதில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்க்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்த அறிவிப்பு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது திங்கட்கிழமைகளில் செய்யப்பட்டு வருகிறது.
ஐசிசி மாத வீராங்கனை லிசேலே
இதற்கான தேர்வுக்குழு செயல்பட்டு இந்த தேர்வை செய்து வருகின்றன. மேலும் ரசிகர்களும் இந்த தேர்வில் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான வீரர் மற்றும் வீராங்கனையை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியாவின் புவனேஸ்வர் குமார் மற்றும் தென்னாப்பிரிக்க வீராங்கனை லிசேலே லீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புவனேஸ்வர் குமார் அறிவிப்பு
கடந்த ஒன்றரை வருடங்களாக பல்வேறு காயங்களால் அவதியுற்று அணியிலிருந்து விலகியிருந்த புவனேஸ்வர் குமார், கடந்த இங்கிலாந்துக்கு எதிரான குறைந்த ஓவர்கள் போட்டிகளில் இடம்பெற்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அவர் தற்போது மார்ச் மாதத்திற்கான ஐசிசி விருதை பெறுகிறார்.
பிப்ரவரியில் அஸ்வின்
கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் முறையே ரிஷப் பந்த் மற்றும் ஆர் அஸ்வின் ஆகியோர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் மாத வீரராகவும் இந்திய வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் இந்திய வீரர்களின் ஆதிக்கத்தை இது காட்டுகிறது.
மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி
இந்நிலையில் காயம் காரணமாக ஏற்பட்ட நீண்ட இடைவெளி மிகுந்த காயத்தை கொடுத்ததாகவும் தற்போது மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை தேர்ந்தெடுத்த ஐசிசி குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.