பெங்களூர்: டுவென்டி 20 போட்டிகளில் 500 சிக்ஸர்களை விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார் கிறிஸ் கெய்ல்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தற்போது ஆடி வரும் கெய்ல், இதுவரை ஆடியுள்ள டுவென்டி 20 போட்டிகளில் மொத்தமாக 500 சிக்ஸர்களைக் குவித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது தனது 500வது சிக்ஸரை விளாசினார் கெய்ல்.
இது கெய்லுக்கு 201வது டுவென்டி 20 போட்டியாகும். இவருக்கு அடுத்த இடத்தில் சக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரரான கீரன் போலார்ட் உள்ளார். அவர் இதுவரை 348 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றிலும் அதிக சிக்ஸர்களை விளாசியவர் கெய்ல்தான். 200க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அவர் விளாசியுள்ளார்.
நேற்றைய போட்டியில் சிக்ஸர் விளாசிய கெய்ல் அடுத்த சில பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினார். 10 ரன்களையே நேற்று அவர் எடுத்தார். நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி அபாரமாக ஆடி 200 ரன்களைக் குவித்த போதிலும் கூட மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டு ஆளுக்கு ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.