பேட்டிங் பிட்ச்
ஆனால், இந்திய பிட்சுகள் எப்போதுமே பேட்டிங்கிற்கு சாதகமானவைதான் என நேற்றைய இரு போட்டிகளின் மூலம் ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள்.
களைகட்டியது உலக கோப்பை
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் நடுவேயான போட்டியும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து நடுவேயான போட்டியும்தான், ரன் மழையை வெளிச்சம் போட காரணம். ரன் குவிப்பு காரணமாக ரசிகர்கள் இருக்கையின் நுனிக்கு வர தொடங்கியுள்ளதால் உலக கோப்பை களை கட்டத்தொடங்கியுள்ளது.
சீனியர் சிங்கங்கள்
அதிலும், சீனியர் வீரர்கள் தங்கள் வழக்கமான ஒத்திசைவோடு அடித்து நொறுக்குவதை பார்க்கும் சுகமே தனி. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெயிலும், வங்கதேசத்துக்கு எதிராக அப்ரிடியும் அதைத்தான் செய்தனர்.
சதம் விளாசிய கெயில்
183 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய வெஸ்ட் இண்டீசில், கெயில், 48 பந்துகளிலேயே சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இதில் 11 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். ஒவ்வொன்றும் முத்து, முத்தான ஷாட்டுகள் என்பதால் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.
கெயில் புயல்
கெயில் புயல் வீசத்தொடங்கினால் ரசிகர்கள் காட்டில் அடை மழைதான். எந்த அணி ரசிகராக இருந்தாலும் கெயில் போன்ற சிறந்த வீரரின் ஆட்டத்திறமைக்கு சலாம் போடத்தான் செய்வார்கள்.
அப்ரிடியின் அதிரடி
அதேபோன்ற ஒரு அதிரடி வீரர்தான் ஷாகித் அப்ரிடி. இவருக்கு மட்டும் ரிட்டையர்மென்டே கிடையாதா என்று பல வருடங்களாக கேள்வியை எதிர்கொள்ளும் அப்ரிடிக்கு, இப்போது வாழ்வா சாவா பிரச்சினை. ஆசிய கோப்பையில் டக் அவுட்டுகளில் நடையை கட்டிய அப்ரிடி நேற்றைய போட்டியில் வங்கதேச பவுலர்களின் விழி பிதுங்க வைத்துவிட்டார்.
வச்சி செய்றாங்க
19 பந்துகளில் 49 ரன்கள் விளாசி, 1 ரன்னில் அரை சதம் வாய்ப்பை தவறவிட்டு விக்கெட்டை பறிகொடுத்தார் அப்ரிடி. பந்து வீச்சிலும் 2 விக்கெட்டுகளை அப்ரிடி வீழ்த்தியிருந்தார். சீனியர் வீரர்கள் சீற்றம் கொண்டு எழுந்துள்ளது ரசிகர்களை உலக கோப்பை பக்கம் ஈர்க்கத் தொடங்கியுள்ளது. நம்ம அணி சீனியர் யுவராஜ் சாதிப்பாரா?