சர்வதேச அளவில் கவனம்
சமீப காலங்களில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இதன்மூலம் சர்வதேச அளவில் அந்த அணி கவனத்தை பெற்றுள்ளது.
பிஸ்மா மரூப் கேப்டனாக நியமனம்
இதனிடையே பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அந்த அணியின் ஆல் ரவுண்டர் பிஸ்மா மரூப்பை நியமித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நம்பிக்கை நட்சத்திரம்
28 வயதான பிஸ்மா மரூப் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்காக இதுவரை 105 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் 103 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த 2016ல் இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடிய பொழுது அதன் கேப்டனாக அப்பொழுதே நியமிக்கப்பட்டிருந்தார்.
33 டி20 போட்டிகளிலும் கேப்டன்
பிஸ்மா மரூப் இதுவரை 15 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 33 சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.
அடுத்த ஆண்டில் பாகிஸ்தான் பங்கேற்பு
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதியிலிருந்து மார்ச் 8 வரை நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் பிஸ்மா மரூப் தலைமையில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி பங்கேற்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் மோதுகிறது
அதற்கு முன்னதாக மரூப் தலைமையிலான பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்திற்கு எதிராக மலேசியாவில் நடைபெறவுள்ள மகளிர் சாம்பியன்ஷிப் தொடரில் 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 சர்வதேச டி20 போட்டிகளிலும் மோதவுள்ளது.
"நன்றாக பார்ம் ஆகியுள்ளது"
இந்நிலையில், பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது பெருமை அளிப்பதாக மரூப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சமீப காலங்களில் டீம் நல்ல பார்மில் உள்ள நிலையில், உலக கோப்பை போட்டியை தான் எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்
இதேபோல பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இக்பால் இமாம் மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்தின் மார்க் கோல்ஸ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், இடைக்கால பயிற்சியாளராக இருந்த இமாம், தன்னுடைய பதவியை தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.