15 போட்டிகளில் பிக்ஸிங்
அல்-ஜசீரா வெளியிட்ட ஆவணப்படத்தில் 2011-12 காலகட்டத்தில் 15 போட்டிகளில் 26 ஸ்பாட் பிக்ஸிங் நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது என கூறப்பட்டுள்ளது. இதில் ஆறு டெஸ்ட் போட்டிகள், ஆறு ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் அடங்கும்.
எந்த நாட்டு வீரர்கள்?
இதில் மேலும், இங்கிலாந்தை சேர்ந்த சில வீரர்கள் 7 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய வீரர்கள் 5 போட்டிகளிலும், பாகிஸ்தான் வீரர்கள் 3 போட்டிகளிலும், மற்ற நாடுகளின் வீரர்கள் ஒரு போட்டியிலும் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வீரர்களுடன் புகைப்படம்
மேட்ச் பிக்ஸிங் செய்யும் புக்கியான முனாவர் என்பவரை பற்றி பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் முனாவர் பல கிரிக்கெட் வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, தமிழகத்தைச் சேர்ந்த லக்ஷ்மிபதி பாலாஜி ஆகியோருடன் முனாவர் நிற்பது போன்ற புகைப்படங்களை அல்-ஜசீரா வெளியிட்டுள்ளது. மேலும், இலங்கையில் நடந்த 2012 டி20 உலகக்கோப்பை தொடரின் போது பல சர்வதேச வீரர்களோடு முனாவர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித், கோலி தவறு செய்யவில்லை
அல்-ஜசீரா இணையதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ரோஹித், கோலியுடன் முனாவர் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் "இந்த புகைப்படத்தில் இருக்கும் வீரர் தவறு செய்தார் என கூறவில்லை" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் என்றால் சூதாட்டமா?
கிரிக்கெட் என்றாலே சூதாட்டம் தான் என சிலர் கூறி வரும் நிலையில், இது போன்ற ஆதாரங்கள் மற்றும் ஆவணப்படங்கள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளது போல இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் யாரும் ஈடுபடவில்லை என அந்த நாட்டு கிரிக்கெட் போர்டுகள் மறுப்பு தெரிவித்துள்ளன.