சிறப்பான ரோகித் சர்மா
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல்லில் 5 முறை கோப்பையை வென்றுள்ளார். அணியின் ஹாட்ரிக் கோப்பைக்கான தீவிரத்துடன் இந்த தொடரை எதிர்கொண்டுள்ளார். முதல் போட்டியில் ஆர்சிபி அணியுடன் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தாலும் தொடர்ந்து வெற்றிக்கான முனைப்பில் உள்ளார் ரோகித்.
கேலிக்குள்ளாகும் பிட்னஸ்
ஆனால் இந்திய அணியின் குறைந்த ஓவர்கள் போட்டிகளில் துணை கேப்டனான ரோகித் சர்மாவின் பிட்னஸ் எப்போதும் கேலிக்குள்ளாகி வருகிறது. ஒரு சிறப்பான விளையாட்டு வீரருக்கான பிட்னஸ் அவரிடம் இல்லை என்பதை அடிக்கடி அனைவரும் பரிகாசமாக கூறி வருவது வழக்கம்.
ஸ்விகி கேலி
ஆனால் தற்போது அந்த விஷயத்தை கையில் எடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளது ஆன்லைன் மூலம் உணவு விற்பனையை செய்துவரும் ஸ்விகி. ரோகித் மகாராஷ்டிராவின் வடா பாவை சாப்பிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இது போட்டோஷாப் இல்லை எண்ணும்படியாக கமெண்ட் செய்து, அதை உடனடியாக நீக்கியும் இருந்தது ஸ்விகி.
ஸ்விகியை புறக்கணிப்போம்
ஆனால் அதற்குள்ளாகவே ஸ்விகியை சமூகவலைதளங்களில் வறுத்தெடுக்க துவங்கி விட்டனர் ரசிகர்கள். இது ஒரு மோசமான விளம்பரம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை விளையாட்டாகவே செய்திருந்தது ஸ்விகி. ஆனால் ஸ்விகியை புறக்கணிப்போம் என்ற ஹாஷ்டேக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகிறது.
|
அவமரியாதை செய்த ஸ்விகி
நமது மேட்ச் வின்னரை ஸ்விகி அவமரியாதை செய்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ரோகித் மட்டுமின்றி யாராக இருந்தாலும் இதுபோன்ற கமெண்ட்டை ஸ்விகி செய்திருக்கக்கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதுபோன்ற ஒரு கமெண்ட்டை ஸ்விகியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.