ஓய்வெடுக்க விரும்புவதாக அறிவிப்பு
தென்னாப்பிரிக்காவின் மெசான்சி சூப்பர் லீக்கில் ஜோஸி ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிவந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் கிறிஸ் கெயில் அந்த தொடரிலிருந்து இடையில் விலகியதுடன் இந்த ஆண்டில் ஓய்வெடுக்க விரும்புவதாகவும் அதனால், பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் விளையாட போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
தனக்கு தெரியாது என்றும் அறிவிப்பு
பிபிஎல் தொடரில் தன்னுடைய பெயர் எப்படி இடம்பெற்றது என்று தனக்கு தெரியாது என்றும் கிறிஸ் கெய்ல் தெரிவித்திருந்தார். மேலும் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் தொடரிலும் விளையாட போவதில்லை என்றும் கூறியிருந்தார்.
அதிகமான சிக்சர்களை அடித்த கெய்ல்
பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் பல தொடர்களில் விளையாடிவந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல், தொடரில் அதிகபட்சமாக 1,338 ரன்களை குவித்துள்ளார். மேலும் 120 சிக்சர்களையும் அடித்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள வங்கதேசத்தின் தமிம் இக்பால், 60 சிக்சர்களையே அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடவடிக்கை எடுக்க முறையீடு
பிபிஎல் தொடரின் சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணிக்காக கிறிஸ் கெயில் விளையாடிவரும் நிலையில், இந்த ஆண்டு அவர் விளையாடுவது குறித்து அவரது ஏஜெண்டிடம் கலந்தாலோசித்தே முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அணியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மறுக்கிறார்
பிபில் தொடரில் விளையாடுவது குறித்து கிறிஸ் கெயிலின் பார்வைக்கு கொண்டு சென்றதாக அவரது ஏஜெண்ட் தெரிவித்த நிலையில், தற்போது அதுகுறித்து கிறிஸ் கெயில் மறுத்து வருவதாக சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணியின் இயக்குநர் ஜலால் யூனுஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
நடவடிக்கை எடுக்க முறையீடு
ஒப்பந்தத்தை மீறி கிறிஸ் கெய்ல் செயல்படுவதாக தெரிவித்த ஜலால் யூனுஸ், இந்த விஷயத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பொழுது தான் இத்தகைய ஒழுங்கீனங்களை பிற்காலத்தில் தவிர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆவணங்களை சரிபார்த்து முடிவு
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சவுத்ரி, ஒப்பந்த ஆவணங்களை சரிபார்த்து, அதன்பின்பு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.