மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஐபிஎல் பைனல்ஸ் நுழைந்துள்ளது எதிர்பார்த்த ஒன்றுதான். கிட்டத்தட்ட சமபலத்தில் உள்ள ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பிராவோ அசாத்தியமாக ரிட்டர்ன் கேட்ச் பிடித்து பதானை அவுட்டாக்கியது முக்கியமான திருப்பமாகும்.
ஐபிஎல் 11வது சீசனின் பைனலுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னேறியுள்ளது. மும்பையில் நேற்று இரவு நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களுக்கு சுருண்டது. 5 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் என்ற நிலையில் ஹைதராபாத் தத்தளித்து கொண்டிருந்தபோது களமிறங்கினார் யூசுப் பதான். 29 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தபோது, பிராவோ வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்துஆட்டமிழந்தார்.
ஓடி வந்து பந்து வீசிய வேகத்தில், பதான் அடித்தப் பந்தை அபாரமாக பாய்ந்து சென்று பிடித்து அவுட்டாக்கினார் பிராவோ. இதை எதிர்பார்க்காத யூசுப் பதான் மிரண்டு போய், சிலையாக நின்றார்.
இதன் மூலம் டி-20 கிரி்க்கெட் போட்டிகளில் தன்னுடைய பந்துவீச்சில் கேட்ச் பிடித்து அவுட்டாக்கிய பவுலர்களில் 25 கேட்ச்களுடன் பிராவோ முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல்லில் இது பிராவோவுக்கு 10வது ரிட்டர்ன் கேட்ச் ஆகும். சிஎஸ்கேவின் ஹர்பஜனும் 10 ரிட்டர்ன் கேட்ச் பிடித்துள்ளார். பிராவோவின் இந்த அட்டகாசமான கேட்ச், ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அந்த கேட்ச் வீடியோதான் தற்போது டாப் ஹிட்.