டேவிட் வார்னர் விளாசல்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் டேவிட் வார்னர் ரன்களை விளாசித் தள்ளினார். 335 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் வார்னர்.
சாதனை செய்ய வாய்ப்பு
அவர் இன்னும் அதிக ரன்கள் அடித்து பிரையன் லாராவின் டெஸ்ட் சாதனையான 400 ரன்களை எட்டி இமாலய சாதனை படைத்திருக்க வாய்ப்பு இருந்தது. எனினும், ஆஸ்திரேலிய கேப்டன் அப்போது டிக்ளர் முடிவை அறிவித்தார்.
கூடுதல் நேரம்
போட்டி சூழ்நிலை கருதி ஆஸ்திரேலிய அணி அந்த முடிவை எடுத்தாலும், ரசிகர்கள் வார்னருக்கு கூடுதல் நேரம் கொடுத்து லாரா சாதனையை உடைக்க வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் எனக் கூறினர்.
400 ரன் சாதனை
அதன் பின், பிரையன் லாரா வார்னரை பாராட்டி பேசினார். அப்போது முதல் கிரிக்கெட் உலகில் லாராவின் 400 ரன்கள் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள வீரர்கள் யார் என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.
ரோஹித் சர்மா செய்வார்
இந்த நிலையில், பிரையன் லாரா இது குறித்து பேசிய போது, இவர் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் தானா? என நீங்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கும் ரோஹித் சர்மா போன்ற ஒருவர் 400 ரன் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
முறியடிக்க முடியும்
ஒரு நல்ல நாளில், அவரது நாளில், சிறப்பான பிட்ச்சில், சரியான சூழ்நிலையில் அவரால் அந்த சாதனையை முறியடிக்க முடியும் என ரோஹித் சர்மா பற்றி குறிப்பிட்டார் லாரா. ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
19 வயது இந்திய வீரர்
அடுத்து, 19 வயது இந்திய வீரர் ப்ரித்வி ஷாவும் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது எனக் கூறி ஆச்சரியம் அளித்தார் லாரா. "இந்த சாதனையை செய்ய அதிரடி வீரர் வேண்டும். ப்ரித்வி ஷா அப்படி ஒரு அதிரடி வீரர்" என்று கூறினார் லாரா.
ஊக்கமருந்து சர்ச்சை
ப்ரித்வி ஷா சமீபத்தில் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி தடை செய்யப்பட்டு, பின் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் ஆடி வருகிறார். அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா? என்பது கேள்விக் குறியாக உள்ளது. லாரா அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்தார்.