4வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி இந்த போட்டி துவங்கவுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக அங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் போட்டி நடைபெறுவது கேள்விக்குறியானது.
திட்டமிட்டபடி நடைபெறும்
இந்நிலையில் 4வது போட்டி பிரிஸ்பேனில் திட்டமிட்டபடி நடக்கும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இடைக்கால சிஇஓ நிக் ஹாக்லி உறுதிப்படுத்தியுள்ளார். இதையொட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பிரிஸ்பேனிற்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
முகக்கவசம் கட்டாயம்
ஆனால் கொரோனா விதிமுறைகளை கவனத்தில் கொண்டு போட்டியின்போது 50 சதவிகித ரசிகர்களே மைதானத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் முகக்கவசம் முக்கியம் என்றும் குயின்ஸ்லாந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனாவை ஒட்டி பிரிஸ்பேனில் விதிக்கப்பட்டிருந்த 3 நாள் லாக்டவுன் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
பிசிசிஐ கோரிக்கை
முன்னதாக பிரிஸ்பேனில் இந்திய வீரர்களுக்கு கடுமையான குவாரன்டைன் விதிமுறைகள் விதிக்கப்படக் கூடாது என்றும், உணவு பரிமாறப்படும் இடங்களில் அவர்கள் சுதந்திரமாக நடமாட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு பிசிசிஐ கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.