டெல்லி அணி சரிவு
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 5 ரன்னில் பும்ராவிடம் பிடிப்பட்டார். அதன் பிறகு டெல்லி அணிக்கு சரிவு தொடங்கியது. கடந்த சில போட்டியில் டெல்லி அணியின் பேட்டிங் முதுகு எலும்பாக இருந்த மிட்செல் மார்ஷ் பும்ரா பந்துவீச்சில் கோல்டன் டக் ஆனார். மார்ஷ் அடித்த பந்தை பாய்ந்து ரோகித் சர்மா பிடித்தார். இது திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அபார கேட்ச்
அதிரடியாக விளையாட முற்பட்ட பிரித்வி ஷா 24 ரன்களில் பும்ரா பந்தில் பெவிலியன் திரும்பினார். இதே போன்று சர்ஃபிராஸ் கான் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் லாவகமாக தாவி பிடிக்க, டெல்லி அணி சரிவை கண்டது. 50 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து டெல்லி தடுமாறியது.
ரிஷப் பண்ட் சோகம்
இதனையடுத்து கேப்டன் ரிஷப் பண்ட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தார். 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ரிஷப் பண்ட், அதனை இரட்டிப்பாக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரமன்தீப் சிங் பந்தில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இதன் மூலம் 13 இன்னிங்சில் 9முறை 20 ரன்களுக்கு மேல் அடித்த பண்ட் ஒரு முறை கூட 50 ரன்கள் அடிக்கவில்லை.
பும்ரா சாதனை
இறுதியில் ரோமன் பொவேல் தனி ஆளாக நின்று போராடினார். 34 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் பொவேல் பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் தொடர்ந்து 7 முறை 15 விக்கெட்டுகளை ஐபிஎல் தொடரில் வீழ்த்திய ஒரே பந்தவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். அக்சர் பட்டேல் 2 சிக்சர் விளாசி 19 ரன்கள் எடுக்க, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்துள்ளது.