பும்ரா
அப்போது பும்ரா தான் ஒரு உள்ளூர் போட்டியில் 20 பந்துகளில் 42 ரன்கள் குவித்தது பற்றி கூறினார். உடனே அந்த ஆட்டத்தின் வீடியோ வேண்டும் என பலரும் கேட்டனர். அதை பகிர்ந்து யுவராஜ் சிங்கிற்கு செம பதிலடி கொடுத்துள்ளார் இளம் வீரர் பும்ரா.
யுவராஜ் ஓய்வு
யுவராஜ் சிங் கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற டி20, டி10 தொடர்களில் பங்கேற்று வந்தார். ஓய்வுக்கு பின் மிகவும் வெளிப்படையாக பேசத் துவங்கிய யுவராஜ் சிங் அணித் தேர்வு பற்றியும் பிசிசிஐ குறித்தும் விமர்சித்து வந்தார்.
யுவராஜ் சிங் சந்திப்பு
இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் நிலையில் யுவராஜ் சிங், இந்திய வீரர்கள் மற்றும் தன்னுடன் ஆடிய முன்னாள் வீரர்களுடன் சமூக வலைதளத்தில் நேரலையில் பேசி வருகிறார்.
ரோஹித், கைஃப்புடன் சந்திப்பு
முன்னதாக ரோஹித் சர்மா, முகமது கைஃப் ஆகியோருடன் பேசினார் யுவராஜ் சிங். நாட்வெஸ்ட் இறுதிப் போட்டி பற்றிய நினைவுகள் மற்றும் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த நினைவுகள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டார். பின்னர் பும்ராவை சந்தித்தார்.
சிக்கலான கேள்வி
பும்ரா இளம் வீரர் என்பதால், யுவராஜ் சிங்கிடம் மரியாதையாக பேசினார் மறுபுறம் யுவராஜ் சிங் அதிரடி கேள்விகளால் பும்ரா சிக்கலில் ஆழ்த்தி வந்தார். விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் இடையே யார் சிறந்த பேட்ஸ்மேன் என கேட்டார் யுவராஜ்.
பும்ரா சமாளிப்பு
அதற்கு பும்ரா நான் இளையவன், அவர்களை விட குறைந்த அனுபவம் கொண்டவன் எனக் கூறி பதில் சொல்லாமல் தப்பிக்க நினைத்தார். ஆனாலும், யுவராஜ் சிங் விடவில்லை. எனவே, பும்ரா தனக்கு பிடித்த வீரராக சச்சினை தேர்வு செய்தார்.
யுவராஜ் சிங் - தோனி இருவரில்…
அடுத்து யுவராஜ் சிங் - தோனி இருவரில் யாரை பிடிக்கும் என மீண்டும் அதிரடி கேள்வியை கேட்டார் யுவராஜ் சிங். இருவரையும் தனக்கு பிடிக்கும் என ஒருவாறாக சமாளித்தார் பும்ரா. அடுத்து அக்சர் பட்டேல் - ஷமி இருவரில் யார் நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள் என்ற கேள்விக்கு அக்சர் பட்டேல் பெயரை கூறினார்.
பேட்டிங் ரெக்கார்டு
அடுத்து அஸ்வின் - ஹர்பஜன் சிங் இருவரில் ஹர்பஜனை தேர்வு செய்தார். பின்னர், யுவராஜ் சிங், பும்ராவை விமர்சிக்க துவங்கினார். பும்ரா அதிகபட்சமாக ஒருநாள் போட்டிகளில் 10 ரன், டெஸ்ட் போட்டிகளில் 10 ரன், ஐபிஎல்-இல் 16 ரன் மட்டுமே எடுத்துள்ளதை சுட்டிக் காட்டினார்.
கடும் விமர்சனம்
மேலும், 80 முதல்தர போட்டிகளில் 82 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதையும் சுட்டிக் காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார் யுவராஜ் சிங். அப்போது பும்ரா தான் 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்துள்ளதாக நம்ப முடியாத தகவல் ஒன்றை கூறினார்.
அந்த வீடியோ
குஜராத் - கோவா அணிகள் மோதிய உள்ளூர் போட்டி ஒன்றில் குஜராத் அணிக்காக ஆடிய பும்ரா அதிரடியாக 20 பந்துகளில் 42 ரன்கள் குவித்து இருந்தார். அதைப் பற்றித் தான் கூறினார் பும்ரா. எனினும், யுவராஜ் சிங் மற்றும் ரசிகர்களும் அந்த வீடியோவை பகிருமாறு கேட்டனர். அதை தற்போது பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார் பும்ரா. தன்னாலும் பேட்டிங் செய்ய முடியும் என ஆதாரம் காட்டி உள்ளார்.