டெஸ்ட் தொடர் வெற்றி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி கொண்டது. இந்த வெற்றியை தீர்மானித்த 4வது போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை முகமது சிராஜ் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
தொடர் ஊக்கம்
இந்நிலையில் மூத்த வீரர் ஜஸ்பிரீத் பும்ரா மிகச் சிறப்பான ஆதரவு மற்றும் ஊக்கம் அளித்ததாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். குறிப்பாக முதல் 2 போட்டிகளில் அவர் தனக்கு மிகுந்த உற்சாகம் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் சிறப்பாக விளையாடாத நிலையிலும் அவர் தனக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்ததாகவும் கூறினார்.
கட்டிப்பிடித்து மகிழ்ச்சி
சிறப்பாக விளையாடாத நிலையில், அடுத்த போட்டியில் கவனம் செலுத்துமாறு பும்ரா அளித்த ஊக்கமே தன்னை வழிநடத்தியதாகவும் சிராஜ் கூறியுள்ளார். இதையடுத்து தான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதும், பும்ராவை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
முகத்தில் தொடர் புன்னகை
இந்தியாவின் பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா இந்திய அணியின் மிகப்பெரிய அடையாளமாக உள்ளார். மைதானத்தில் எந்த நெருக்கடியான சூழலையும் சிறப்பாக கையாண்டு, முகத்தில் எப்போதும் புன்னகையை கவசமாக கொண்டிருப்பவர் இவர். இளம் வீரர்களுக்கு சிறப்பான வழிகாட்டியாகவும் இவர் திகழ்ந்து வருகிறார்.