மும்பை : நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பிசிசிஐ-யால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் ஆலோசனை குழுவில் (CAC), கங்குலி, சச்சின், லக்ஷ்மன் ஆகிய மூவரும் இருக்கின்றனர். தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளின்படி இவர்கள் மூவரும் பதவி விலக நேரிடும் என கூறப்படுகிறது.
இதற்கான காரணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கங்குலி பெங்கால் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருக்கிறார். மேலும், கிரிக்கெட் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒப்பந்தத்தில் இருக்கிறார். அதே போல, விவிஎஸ் லக்ஷ்மன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒப்பந்தங்கள் மற்றும் ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு வழிகாட்டி என்ற பொறுப்பிலும் இருக்கிறார். சச்சினின் மகன் தற்போது அண்டர்-19 இந்திய அணியில் ஆடி வருகிறார்.
ஏற்கனவே ஒரு மாநில கிரிக்கெட் அமைப்பில் பதவியில் இருப்பதால், கங்குலி ஆலோசனை குழுவில் இடம் பெற முடியாது என தெரிகிறது. ஒருவேளை, அவர் பெங்கால் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகினால், அவர் இந்த குழுவில் தொடர முடியும். தனியார் நிகழ்ச்சிகளிலும் ஒப்பந்தம் செய்து கொண்டு பங்கேற்க முடியாது என கூறப்படுகிறது.
அதே போல, லக்ஷ்மன் தன் மற்ற பதவிகள் மற்றும் ஒப்பந்தங்களை ரத்து செய்தால் மட்டுமே இந்த பதவியில் தொடர முடியும். சச்சினைப் பொறுத்தவரை அவர் மகன் கிரிக்கெட் பிசிசிஐ-க்கு கட்டுப்பாட்டில் வரும் அண்டர்-19 அணியில் ஆடி வருவதால், அவர் இனி பயிற்சியாளர் அல்லது அணித்தேர்வு தொடர்பான எந்த பதவியிலும் இருக்க முடியாது.
இதற்கிடையே, ஆலோசனைக் குழுவிற்கு விரைவில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் மட்டத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதே போல இந்த பதவி தற்போது கௌரவ பதவியாக இருக்கிறது. இந்த பணிக்கு எந்த சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை. இதை மாற்றி, இந்த பதவிக்கு இனி சம்பளம் நிர்ணயம் செய்யப்படும் என்ற செய்தியும் வந்துள்ளது.
விதிகளின்படி, இந்த மூவரிடமும் பதவியில் தொடர விருப்பம் உள்ளதா என தெரிந்து கொண்டே புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த மூவரும், பதவியில் நீடித்தால் தேவையற்ற சர்ச்சை எழும் என்ற காரணத்தால் விருப்பம் இல்லை என கூறி பதவி விலகிவிடுவார்கள் என்றே தெரிகிறது.