20ம் தேதி அணிகள் பயணம்
ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில் அணிகள் அனைத்தும் அதற்கென தயாராகி வருகின்றன. துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. வரும் 20ம் தேதியையொட்டி அணிகள் தங்களது பயணத்தை துவக்க பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ்
4 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனின் கோப்பையை வென்று அந்த எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா அமைதியாக அமர்ந்து ஹெட்போனில் எதையோ என்ஜாய் செய்துவரும் புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
கேப்ஷன் வெளியிட்ட எம்.ஐ
அந்த புகைப்படத்தில் நாற்காலியில் அமர்ந்துள்ள பும்ரா, அமைதியாக காணப்படுகிறார். அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, புயலுக்கு முன்னே அமைதி என்று கேப்ஷன் வெளியிட்டுள்ளது. பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதுவரை 77 போட்டிகளில் விளையாடி 82 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
19 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா
கடந்த ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றுள்ள நிலையில், அந்த தொடரில் மொத்தமாக 16 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நடத்தப்படாமல், யூஏஇக்கு ஐபிஎல் போட்டிகள் மாற்றப்பட்டுள்ளன. அங்கு அடுத்த மாதம் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதிவரையில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.