அதிரடி வேகப்பந்து வீச்சாளர்
பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அக்ரம். இவர் முன்னாள் இந்திய துவக்க வீரர் ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் ஷோவான ஆகாஷ்வாணியில் பேசி இந்திய வீரர்கள் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டவர்கள் குறித்த தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
விராட் முறியடிப்பாரா?
சச்சினின் பல்வேறு சாதனைகளை கேப்டன் விராட் கோலி முறியடிப்பாரா என்று வாசிம் அக்ரம் கேள்வி எழுப்பியுள்ளளார். விராட் கோலி பல சாதனைகளை புரிய வேண்டியுள்ளது, பல்வேறு உயரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளளது. ஆனால் சச்சினின் சாதனைகளை அவர் முறியடிப்பாரா, அவர் இன்னும் தூரங்களுக்கு பயணிக்க வேண்டியுள்ளது, அவருக்கு கால அவகாசம் உள்ளது என்றும் அக்ரம் கூறியுள்ளார்.
வித்தியாசமான வீரர்கள்
விராட் கோலியை அவரது வளர்ச்சியை ஆரம்ப காலம் முதலே தொடர்ந்து கவனித்து வருபவர் வாசிம் அக்ரம். விராட் நவீன காலத்திற்கு ஏற்ற சிறப்பான வீரர் என்று தெரிவித்துள்ள அக்ரம், விராட் கோலியும் சச்சின் டெண்டுல்கரும் இருவேறு வித்தியாசமான வீரர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அமைதியான சச்சின்
தனி மனிதனாகவும் விளையாட்டு வீரராகவும் விராட் கோலி மிகவும் வலிமையானவர் என்று கூறியுள்ள அக்ரம், அதேபோல சச்சின் டெண்டுல்கரும் வலிமையானவர் என்றாலும் அதே நேரத்தில் அமைதியானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இருவருக்குமே வித்தியாசமான உடல்மொழிகள் உள்ளதை ஒரு பௌலராக தான் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆத்திரப்படும் கோலி
சச்சினுக்கு நான் பந்துவீசி அவரை அவுட் ஆக்க விரும்புவது அவருக்கு தெரிந்தால் அவர் இன்னும் கவனமுடன் விளையாடுவார். அதே நேரத்தில் அந்த சந்தர்ப்பத்தில் கோலி ஆத்திரப்படுவார். ஒரு பேட்ஸ்மேன் ஆத்திரப்பட்டால் அவரை அவுட்டாக்க பௌலருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அக்ரம் தெரிவித்துள்ளார்.